பிரிஸ்பேனில் ஜெர்மனி அதிபர், சவுதி இளவரசரை சந்தித்து பேசிய மோடி
பிரிஸ்பேன்: ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சவுதி இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் தனித்தனியாக சந்ததித்து பேசினார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். பிரிஸ்பேன் நகரில் மோடி ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசினார். மோடி ஜெர்மனிக்கு வருவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக மெர்கல் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் செல்லும் வழியில் பெர்லினில் தங்கிய மோடியால் மெர்கலை சந்திக்க முடியாமல் போனது. ஏனென்றால் மெர்கல் ஃபீபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண ரியோடிஜெனீரோ சென்றுவிட்டார்.
இந்நிலையில் தான் மோடி தற்போது மெர்கலை சந்தித்துள்ளார். மேலும் மோடி சவுதி இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸையும் சந்தித்து பேசினார். நட்பு நாட்டின் பிரதமருக்கு வாழ்த்துக்கள். அனைத்து துறைகளிலும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க சவுதி தயாராக உள்ளது என்று இளவரசர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.
மோடி ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பேசுகையில் லக்னோவில் அடக்கம் செய்யப்பட்ட அமெரிக்க ஆர்கிடெக்டான கிரிஃபின் பற்றி பேசினார். அமெரிக்காவைச் சேர்ந்த வால்டர் பர்லி கிரிஃபின் ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பெர்ராவை வடிவமைத்தவர். 1937ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி தனது 61வது வயதில் அவர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

அவரது உடல் லக்னோவிலேயே அடக்கம் செய்யப்பட்டது. இது பற்றி தான் மோடி, அபாட், ஒபாமா பேசிக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications