சிங்கப்பூரில் ஆண்ட்ராய்ட் ஆப்களை வெளியிட்ட பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர்: இந்திய பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் இன்று நடந்த விழாவில் அவர் சில ஆண்ட்ராய்ட் செயலிகளை வெளியிட்டார்.
தன்னுடைய நான்காவது ஆண்டை நிறைவு செய்திருக்கும் பிரதமர் மோடி, தற்போது கிழக்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார். அதன் முதற்கட்டமாக அவர் இந்தோனேசியா சென்றார்.
இந்த நிலையில் தற்போது மோடி சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் சென்ற மோடி, இன்று காலை அந்நாட்டின் பிரதமர் லீ செய்ன் லாங்கை சந்தித்து உரையாடினார். அதன்பின் நடந்த நிகழ்வில் இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா கனவு குறித்து பேசினார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில ஆண்ட்ராய்ட் செயலிகளை குறித்து அவர் அந்த நிகழ்வில் பேசினார். அந்த செயலிகளை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தினார். பீம், ரூபே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தி பேசினார்.
இந்த செயலிகள் மூலம் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்கள் அதிக பயனடைவார்கள் என்று மோடி குறிப்பிட்டார். இனி பணம் மாற்றுவது, வீட்டிற்கு பணம் அனுப்புவது இந்தியர்களுக்கு எளிதாக இருக்கும். டிஜிட்டல் இந்தியா மூலம் மக்கள் அதிக பயனடைந்து வருகிறார்கள் என்று மோடி பேசினார்.