பணம் மரத்தில் காய்க்காது.. வாஸ்தவம்தான்..ஆனால் தங்கத்தை வளர்க்க முடியுமாமே..!
மெல்போர்ன்: பணம் என்ன மரத்திலா காய்த்துக் கிடக்கிறது என்று சொல்வார்கள்.. ஆனால் தங்கத்தை மரம் போல வளர்க்கலாம் என்ற ஒரு புதிய சிந்தனையைத் தூண்டியுள்ளது ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு.
அதாவது யூகலிப்டஸ் மரத்தின் இலைகளில் தங்கம் பதிந்திருப்பதை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இலையின் நரம்புகளில் இந்தத் தங்கம் காணப்படுகிறதாம். கிட்டத்தட்ட தங்க மரம் போலவே இது காட்சி தருகிறது. இது விஞ்ஞானிகளிடையே புதிய ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
இலையில் தங்கம் எப்படி...
இதுகுறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், கீழே புதைந்துள்ள தங்கம்தான் இப்படி இலைகள் வழியாக மேலே வந்துள்ளது. இது ஒரு புதிய விஷயம்.
செடி கொடிகள் போலவே உலோகங்களும் வளருமா...
ஆழப் புதைந்து கிடக்கும் தங்கம் போன்ற உலோகங்கள் இதுபோல செடி கொடிகள், மரங்கள் வழியாக மேலே வரும் வாய்ப்புகள் உள்ளன என்ற சிந்தனையை இந்த புதிய கண்டுபிடிப்பு நமக்கு எடுத்துணர்த்துகிறது.
மரம் பார்த்து உலோகத்தைக் கண்டுபிடி...
மேலும் இதுபோன்ற இடங்களில் பெருமளவில் தங்கம் புதைந்திருக்கலாம் என்ற தகவலையும் இது நமக்குக் கொடுத்துள்ளது. நிச்சயம், கீழே தங்கம் இல்லாமல், இப்படி இலைகளில் தங்கப் படிவு வந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த இடத்தில் தங்கம் அபரிமிதமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றனர்.
ஆழப் போகும் யூகலிப்டஸ் வேர்கள்
யூகலிப்டஸ் மரத்தின் வேர்கள் பூமிக்குக் கீழே வெகு ஆழத்திற்குப் போகக் கூடியவை. அதாவது தங்கம் போன்ற உலோகங்கள் புதைந்து கிடக்கும் இடத்தையும் தாண்டி இவை தண்ணீர் தேடிச் செல்லும் தன்மை கொண்டவையாகும். அப்படி தண்ணீர் தேடிச் சென்றபோது தண்ணீருடன் சேர்த்து தங்கத்தையும் இவை உறிஞ்சி எடுத்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வேர்கள் மூலம் தங்கத்தை உறிஞ்சலாம்
இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து விஞ்ஞானிகள் மேலும் கூறுகையில், ஆழமான முறையில் செல்லும் வேர்கள் மூலம் தங்கம் போன்றவற்றை உறிஞ்சி மேலே கொண்டு வர முடியும் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது.
மிக மிக சிறிய அளவில்தான்
இந்த தாவரத்தின் இலையில் மிக மிக சிறிய அளவில்தான் தங்கம் காணப்படுகிறது. இருந்தாலும், கீழேயிருக்கும் தங்கம் வேர் மூலம் உறிஞ்சப்பட்டு இலை வரை வந்ததே பெரிய விஷயம்தான் என்றார்கள்.
இதுவரை 1,74,000 டன் தங்கத்தை சாப்பிட்டாச்சு
மனித நாகரீகம் தொடங்கியது முதல் இதுவரை பூமிக்குக் கீழிருந்து 1 லட்சத்து 74 ஆயிரம் டன் தங்கத்தை நாம் வெட்டியெடுத்திருக்கிறோம் என்று உலக தங்க கவுன்சிலின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இன்னும் 51,000 டன் தங்கம்தான் பாக்கி
இன்னும் பூமிக்குக் கீழே 51,000 டன் தங்கம்தான் இருப்பு இருக்கிறதாம்.
தங்க மரம் வளர்க்கலாமா...
இந்த நிலையில்தான் புதிய கண்டுபிடிப்பு பல சிந்தனைகளை கிளை பரப்பி வியாபிக்க வைத்துள்ளது. எதிர்காலத்தில் தங்கத்தையும் மரம் போல வளர்க்க முடியுமா என்ற ஆய்வுக் கோணத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது.
நடக்கலாம்... என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.