ஊருக்குள் புகுந்து ஆட்களை கொல்லும் கரடிகள்.. ராட்சதஓநாய் ரோபோக்களை களமிறக்கிய ஜப்பான்
ஜப்பானில் உள்ள நகரம் ஒன்றில் கரடிகளை விரட்ட ராட்சச ஓநாய் ரோபோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ள கரடிகளை விரட்டியடிக்க ராட்சச ஓநாய் ரோபோக்கள் நிறுவப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹொகாய்தோ தீவில் இருக்கிறது தகிகாவா நகரம். வனத்தை ஒட்டிய இந்த நகரில் கரடிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. ஊருக்குள் புகும் கரடிகள் மக்களையும் தாக்குகின்றன.
கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு தகிகாவாவில் கரடிகளின் தாக்குதல் மிகவும் அதிகரித்துவிட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் கரடி தாக்கி இருவர் உயிரிழந்துவிட்டனர். எனவே இதனை தடுப்பது குறித்து அரசு சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

ராட்சத ஓநாய் ரோபோக்கள்
இறுதியில் கரடிகள் ஊருக்குள் புகுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக ராட்சச ஓநாய் ரோபோக்களை பயன்படுத்த அரசு முடிவு செய்தது. நான்கு கால்கள், கொடூரமான கண்கள், கூரிய பற்கள் என அச்சு அசல் ஓநாய் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், ஊருக்கு வெளியே எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளள.

எச்சரிக்கை ஒலி
ஓநாய் ரோபோக்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள் கரடிகளை சரியாக அடையாளம் கண்டு ஒலி எழுப்பும். அதைக் கேட்டு பயந்து கரடிகள் ஊருக்குள் நுழையாமல் ஓடிவிடும் என ஜப்பான் அரசு நிர்வாகம் நம்புகிறது. மேலும் ஓநாய் ரோபோக்களின் சத்தம் கேட்டு உள்ளூர் மக்களும் சுதாரித்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராட்டும் மக்கள்
கரடிகளை விரட்ட அரசு எடுத்துள்ள இந்த முயற்சியை தகிகாவா மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பது மக்களுக்கு பயனுள்ளதாக மட்டுமே அமைய வேண்டும் என்பதை இந்த ஓநாய் ரோபோக்கள் எடுத்துரைக்கின்றன.

நமக்கும் தேவை
நம்மூரிலும் சில ஊர்களில் அடிக்கடி யானை அல்லது புலி ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. அங்கும் இது மாதிரி ஏதாவது கண்டுபிடிப்புகள் செய்தால், நிச்சயம் அப்பகுதி மக்களை நிம்மதியடையச் செய்யும். பல உயிர்கள் தப்பும்.












Click it and Unblock the Notifications