துபாயில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி மௌலித் ஷரீஃப்
துபாய்: கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் புனித கந்தூரி மற்றும் மௌலித் மஜ்லிஸ் துபாய் அஸ்கான் டி பிளாக்கில் கடந்த 14ம் தேதி இரவு இஷா தொழுகைக்குப் பிறகு வெகு விமரிசையாக நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக துபாய் மர்கஸூஸ் ஸகாஃப் ஸூன்னிய்யா இயக்குநர் அல்ஹாஜ் அபுபக்கர் முஸலியார் ஸகாஃபி, மக்கள் தொடர்பு மேலாளர் அப்துல் ஸலாம் ஸகாஃபி, கேரளா கோழிக்கோடு மதீனத்துந் நூர் மத்ரஸா மேலாளர் மௌலவி அபு ஸாலிஹ் ஸகாஃபி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முறையே கீழக்கரை இளம் தொழில் அதிபர் முஷ்தாக், கீழக்கரை சமுதாய புரவலர் சி.த. என்ற செய்யது அப்துல் காதிர், சென்னை கிப்ஸ் ஷம்ஸுத்தீன் ஃபைஜி ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
காயல்பட்டினம் முத்து வாப்பா ஆலிம் அவர்கள் மஜ்லிஸை சிறப்பாக நெறிவுறுத்தி தந்தார். அப்துல் ரஹ்மான், மதுக்கூர் ஷாஹுல் ஹமீது ஆகியோர் வலிகள் கோமான் தமிழ் புகழ் மாலை பாடினர்.
கீழக்கரை பல்லாக்கு முத்துவாப்பா ரஹ்மத்துல்லாஹி அலைஹி நினைவு தினமான அன்று, அப்பா அவர்களின் புகழ் மாலையும் பாடப்பட்டது. கேரளா மௌலவி அபு ஸாலிஹ் ஸகாஃபி மலையாளத்தில் முஹ்யித்தீன் மாலை பைத் ஓதினார். வலிகள் கோமான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் வாழ்க்கை வரலாற்றை துபாய் மர்கஸூஸ் ஸகாஃப் ஸூன்னிய்யா இயக்குநர் அல்ஹாஜ் அபுபக்கர் முஸலியார் ஸகாஃபி மலையாளத்திலும், கீழக்கரை முஹிப்புல் உலமா மஹ்ரூஃப் தமிழிலும் எடுத்துரைத்தனர்.
சங்கை மிகு ஆலிம்கள், துபாய் வாழ் அனைத்து ஊர் ஜமாஅத்தினர், அமீரக பிலாலிய்யா அரபிக் கல்லூரி அலும்னியைச் சார்ந்த ஆலிம் பெருமக்கள், அபுதாபி மௌலித் கமிட்டியினர், ஏகத்துவ மெய்ஞான சபை நிர்வாகிகள், துபாய் மதுக்கூர் ஜமாஅத் நிர்வாகிகள், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆண்களும், பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கீழக்கரை தைக்கா ஒஃபூர் தலைமையில் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன், காயல்பட்டினம் ஈஸா, கங்கவல்லி யாகூப், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் உள்ளிட்ட துபாய் ஸுன்னத் வல் ஜமாஅத் நிர்வாகிகள் மஜ்லிஸிற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.