சிசிலி தீவில் வெடித்து சிதறிய மவுண்ட் எட்னா எரிமலை.. 2 முக்கிய விமான நிலையங்கள் மூடல்
சிசிலி: இத்தாலி நாட்டிலுள்ள சிசிலி தீவில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதில் அருகிலுள்ள நிலப்பரப்புகள் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான இத்தாலியின் மவுண்ட் எட்னா வெடித்து தீப்பிழம்புகளை கக்கியது. சிசிலி தீவில் உள்ள எட்னா எரிமலை வெடித்து சிதறியதால் வெளி வந்த நெருப்பு குழம்பு, அருகிலுள்ள அனைத்து இடங்களுக்கும் பரவியது.
இதனால் சிசிலியின் இரண்டாவது பெரிய நகரமான கட்டானியாவில் இரண்டு விமான நிலையங்களை மூடுவதற்கு மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு காரணமாக அமைந்தது
எரிமலை அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கமே உறங்கிக் கொண்டிருந்த எட்னா எரிமலை லாவாவை கக்க காரணம் என்பது தெரிய வந்துள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக சிசிலி வான்வழிப் பாதையில் விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படவில்லை.
நள்ளிரவு வெடிக்க துவங்கிய எரிமலையால் அருகிலிருந்து கடானியா மற்றும் காமிசோ விமான நிலையங்களை புகைமண்டலம் சூழ்ந்தது. சாம்பலும் கரும்புகையும் பரவியதால் மேற்கண்ட விமானநிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன .
எரிமலை வெடிப்பு காரணமாக காமிசோ விமானநிலையத்தில் விமான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. சுமார் 3,300 மீட்டர் உயரமுடைய எட்னா எரிமலை வெடித்து சிதறும் சம்பவம், அடிக்கடி நிகழ்ந்தாலும் இதுவரை குறைவான சேதத்தையே ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. எனினும் எரிமலைக்கு அருகில் வசித்து வரும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
தற்போது எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட நெருப்பு குழம்பானது சுமார் 1.5 கிமீ தொலைவு பயணித்து, எரிமலையின் தென்கிழக்கு முகத்தில் அமைந்துள்ள ஆக்ஸ் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பகுதியில் சேர்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.