ரமலானில் மது விற்பனை: பாரில் வேலை செய்யும் முஸ்லீம் பெண் மீது தாக்குதல்
பாரீஸ்: பிரான்ஸில் உள்ள பார் ஒன்றில் பணியாற்றும் முஸ்லீம் பெண் ரமலான் மாதத்தில் மது அளித்ததற்காக தாக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸில் உள்ள நைஸ் நகரில் இருக்கும் பார் ஒன்றில் முஸ்லீம் பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அவர் பாரில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்ற இரண்டு ஆண்கள் பாருக்குள் வந்து அந்த பெண்ணை பார்த்து புனித ரமலான் மாததத்தில் இப்படி மது விற்பனை செய்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டுள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து சென்றனர். பின்னர் அதில் ஒருவர் திரும்பி வந்து அந்த பெண்ணின் முகத்தில் குத்தியதுடன், அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் அந்த பெண் காயம் அடைந்தார்.
இந்த சம்பவம் பாரில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து அந்த 2 பேர் யார் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.