தாக்க வந்த தீவிரவாதிகள்.. கிறிஸ்தவர்களைக் காப்பாற்றிய இஸ்லாமியர்கள்... கென்யாவில் நெகிழ்ச்சி
நைரோபி: கென்யாவில் தீவிரவாதிகள் பஸ்ஸைத் தடுத்து நிறுத்தி அதில் பயணம் செய்த கிறிஸ்தவர்களை கொல்ல முயன்றபோது இஸ்லாமியர்கள் கவசம் போல சூழ்ந்து நின்று காப்பாற்றிய செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
கென்யாவில் சோமாலி சேபாப் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நைரோபியிலிருந்து வட கிழக்கில் உள்ள மன்டரா என்ற இடத்திற்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது.

அந்தப் பேருந்தை தீவிரவாதிகள் திடீரென குறுக்கிட்டு தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த பயணிகளில் முஸ்லீம்களைத் தனியாகவும், முஸ்லீம் அல்லாதவர்களைத் தனியாகவும் பிரிந்து நிற்குமாறு உத்தரவிட்டனர். ஆனால் முஸ்லீம் பயணிகள் இதை ஏற்க மறுத்தனர். அனைவரும் சேர்ந்துதான் இருப்போம். முஸ்லீம் அல்லாதவர்களைக் கொல்ல அனுமதிக்க மாட்டோம். விட்டால் அனைவரையும் விடுவியுங்கள். இல்லாவிட்டால் அனைவரையும் சேர்ந்தே கொல்லுங்கள் என்று உறுதிபடக் கூறி விட்டனர்.
இதனால் கோபமடைந்த தீவிரவாதிகள் எச்சரிக்கும் வகையில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சில முஸ்லீம் பயணிகள் காயமடைந்தனர். அப்படியும் அவர்கள் முஸ்லீ்ம் அல்லாத பயணிகளை கைவிடவில்லை. கவசம் போல காத்து நின்றனர்.
இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முஸ்லீம் பயணிகள் விடாப்படியாக பிடிவாதமாக நின்று விட்டதால் தீவிரவாதிகள் அங்கிருந்து போய் விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கென்ய உள்துறை அமைச்சர் ஜோசப் கைசேரி கூறுகையில், இது மிகப் பெரிய செய்தியை உள்ளடக்கியுள்ளது. இங்கு மதம் முக்கியமில்லை, அனைவரும் கென்யர்களே என்பதை முஸ்லீம் மக்கள் உணர்த்தியுள்ளனர் என்றார்.
முஸ்லீம் பயணிகளில் ஒருவரான அப்தி முகம்மது அப்தி என்பவர் கூறுகையில், 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் எங்களை மடக்கினர். அனைவரும் பஸ்சுக்குள் ஏறி எங்களை பிரிந்து நிற்குமாறு உத்தரவிட்டனர். ஆனால் நாங்கள் மறுத்து விட்டோம்.
சில முஸ்லீம் அலலாத பயணிகளிடம், முஸ்லீம்கள் அணியும் சில உடை அடையாளத்தையும் கூட நாங்கள் கொடுத்து அவர்களைக் காப்பாற்றினோம். அனைவரும் ஒன்றாக, ஒற்றுமையாக நின்றதால் தீவிரவாதிகளால் அவர்களது செயலைச் செய்ய முடியாமல் போனது என்றார்.












Click it and Unblock the Notifications