"உலக நாயகனே"... 340 நாட்களுக்குப் பிறகு பூமிக்கு ரிட்டர்ன் ஆன ஸ்காட் கெல்லி!
கஜகஸ்தான்: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ஆய்வு மேற்கொண்டு வந்த ஸ்காட் கெல்லி உள்ளிட்ட 3 விண்வெளி வீரர்கள் இன்று பூமிக்குத் திரும்பினர்.
சோயூஸ் விண்வெளி ஓடம் மூலமாக நாசாவின் ஸ்காட் கெல்லி மற்றும் ரஷ்ய ஆராய்ச்சியாளார்களான மைக்கேல் கோர்னேன்கோ, செர்ஜரி வால்கோவ் ஆகியோர் கஜகஸ்தானில் பத்திரமாக தரையிறங்கினர்.
கசாக் அருகில் அமைந்துள்ள ஒரு பிரதேசத்தில் இந்த கேப்சூல் தரையிறங்கியது. இதனையடுத்து விண்வெளி வீரர்கள் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

கெல்லியும், கோர்னேன்கோவும் கிட்டதட்ட 340 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்துள்ளனர். மேலும், இரண்டு முறை அவர்கள் அங்கு ஆராய்ச்சி நடத்தியுள்ளனர்.
அமெரிக்க விண்வெளி வரலாற்றிலேயே அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெருமையை அவர்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கெல்லி மிக முக்கியமானவர். விண்வெளியில் இருந்த காலத்தில் இவர் சும்மா இருந்ததில்லை. மாறாக பூமியை விதம் விதமாக புகைப்படம் எடுத்து அப்டேட் கொடுத்துக் கொண்டே இருந்தார். அவரது புகைப்படங்கள் மூலம் பூமியின் பிரமிக்கத்தக்க உருவங்களை, படங்களை நாம் பார்க்க முடிந்தது.
கெல்லி உள்ளிட்டோர் பத்திரமாக தரையிறங்கியதையடுத்து டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும், இணையதளத்திலும் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.












Click it and Unblock the Notifications