செவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்!
கேப் கனவரல் (ப்ளோரிடா): செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வதற்காக மாவென் என்ற விண்கலத்தை திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது அமெரிக்காவின் நாசா அமைப்பு.
அமெரிக்க நேரப்படி பிற்பகல் 1.28 மணிக்கு, அட்லஸ் வி-401 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் 10 மாதங்கள் பயணித்து செவ்வாயை அடையும்.
"விண்கலம் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளது நாசா தரைக்கட்டுப்பாட்டு மையம்.

அடுத்த ஆண்டு (2014) செப்டம்பர் மாதம் செவ்வாயை அடையும் மாவென், அந்த கிரகத்தின் நிலப்பரப்புக்கு 6 ஆயிரம் கி.மீ. உயரத்தில் ஓராண்டு காலம் சுற்றி வரும். எனினும், அது 5 முறை செவ்வாய் நிலப்பரப்புக்கு 125 கி.மீ. தூரம் நெருக்கமாக வந்து, அதன் சூழ்நிலையை ஆராயும். குறிப்பாக, அங்கு தண்ணீர் இல்லாததற்கான காரணம் போன்றவை குறித்து ஆராயப்படும்.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்தியா சமீபத்தில் விண்ணில் செலுத்திய மங்கள்யானுக்கு முன்பாக, அமெரிக்காவின் மாவென் விண்கலம் அந்த கிரகத்தை அடைய உள்ளது.
முன்னதாக, செவ்வாயின் தரையை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய மார்ஸ் ரோவர் என்ற விண்கலம் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தை எட்டி, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications