நானோ ஹெலிகாப்டர், ரோபோட் தேனீ.. செவ்வாயை ஆராய்ச்சி செய்ய நாசாவின் அல்டிமேட் ஐடியா!
செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அமைப்பு சிறிய ரக நானோ ஹெலிகாப்டரை அனுப்ப உள்ளது.
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அமைப்பு சிறிய ரக நானோ ஹெலிகாப்டரை அனுப்ப உள்ளது. 2020ல் இந்த ஹெலிகாப்டர் அனுப்பப்படும் என்று கூறியுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு நாசா ஏற்கனவே ரோவர் அனுப்பி உள்ளது. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது.
தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை நாசா துரிதப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது.
எப்படி உருவானது
இந்த ஹெலிகாப்டர் நானோ தொழில்நுட்பம் மூலம் உருவானதாகும். இதை உருவாக்க நாசா விஞ்ஞானிகள் கடந்த 4 வருடமாக கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். கடுமையான ஆராய்ச்சிக்கு பின் செவ்வாயின் வானிலையில் பறக்கும் வகையில் இந்த ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளனர். இதன் எடை வெறும் 1.8 கிலோதான் இருக்கும். பூமியில் பயன்படுத்தப்படும் டிரோன் வகை விமானங்களை விட சிறிதாக இருக்கும்.
வேகம்
இதன் இறக்கைகள் மொத்தம் ஒரு நிமிடத்திற்கு 3000 முறை சுழலும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் பூமியில் உள்ள ஹெலிகாப்டரை விட வேகமாக சுழலும். செவ்வாயில் பறப்பதற்காக இப்படி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இது பூமியில் 40 ஆயிரம் அடி வரை பறக்கும், செவ்வாயில் 1 லட்சம் அடி வரை பறக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஆராய்ச்சி
இதில் சிறிய ரக கேமராக்கள் உள்ளது. இது ஆராய்ச்சி செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பும். இது 2020ல் ஏவப்பட்டு 2021 செவ்வாயை அடையும். இதனுடன் இதை கட்டுப்படுத்துவதற்காக, ரோவர் ஒன்றும் அனுப்பப்பட உள்ளது. இந்த ரோவரில், இந்த ஹெலிகாப்டரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு மாதம் வரை செவ்வாய் கிரகத்தில் பறக்கும்.
அடுத்து என்ன திட்டம்
இதோடு இன்னும் சில வருடங்களில் செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ''மார்ஸ்பீஸ்'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் தேனீக்கள் அனுப்பப்பட உள்ளது.இது செவ்வாய் கிரகத்தில் எளிதாக பறக்கும். இங்கு இருப்பதை விட அங்கு ஈர்ப்பு விசை குறைவு. இதை வைத்து ஆராய்ச்சி செய்வதும் மிகவும் எளிதாகும்.