ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க! ரஷ்யாவிற்கு இந்தியாதான் சரியான ஆள்! உக்ரைன் பெண் எம்பி உருக்கமான கோரிக்கை
கிவ்: ‛‛உக்ரைனில் அப்பாவி மக்களை கொல்லும் ரஷ்யாவை பலமாக தாக்க இந்திய அரசியல்வாதிகள் உதவ வேண்டும்'' என உக்ரைன் நாட்டின் பெண் எம்பி சோபியா பெடினா கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இன்று 2வது நாளாக குண்டுமழை பொழிகிறது. இதனால் உக்ரைன் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் பதுங்கி வருகின்றனர். ஏராளமான மக்கள் உயிரை காக்க பதுங்கு குழிகள், சுரங்கபாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

பதற்றம்
ரஷ்யா உக்ரைனில் ஏவுகணைகள், ராக்கெட்டுகள், பீரங்கிகள் மூலம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உலக நாடுகள் இதுவரை உக்ரைனுக்கு உதவி செய்யவில்லை. இதனால் ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி புலம்பி வருகிறார். மேலும் நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை ஆயுதம் ஏந்தி போர்களத்தில் இறக்கியுள்ளார்.

உதவி கோரும் உக்ரைன்
மேலும் ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தங்களுக்கு பிற நாடுகள் உதவி செய்ய வேண்டும். ஆயுதங்கள், மருந்து பொருட்கள் வழங்குவதோடு, ரஷ்யாவுக்கு பாடம் புகட்டும் வகையில் அதன்மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என தொடர்ந்து உக்ரைன் அதிபர் கூறி வருகிறார். ஆனால் பிற நாடுகள் இன்னும் உக்ரைனுக்கு படை, ஆயுதங்களை அனுப்பவில்லை.

இந்திய அரசியல்வாதிகள்...
மேலும் ரஷ்யாவுடன் நல்லுறவு இருப்பதால் இந்த போரில் இருந்து உக்ரைனை காப்பாற்ற இந்தியா உதவி செய்ய வேண்டும் என உக்ரைன் நாடு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் உக்ரைன் எம்பி சோபியா பெடினாவும் இந்தியாவின் உதவியை கோரியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுவதோடு, உளவியல், மருந்து, பொருட்களின் உதவியும் தேவையாக உள்ளது.

சர்ச்சை
ஏனென்றால் உக்ரைனில் அப்பாவி மக்களை கொல்லும் ரஷ்யாவை நாங்கள் பலமாக தாக்க வேண்டியுள்ளது. இறையாண்மையுடன் செயல்படும் உக்ரைனில் மனிதநேயத்தை நிலைநாட்ட இந்தியா அரசியல்வாதிகள் உதவ வேண்டும்'' என கூறினார். இந்தியாவிடம் உதவி கோரிய எம்பி சோபியா பெடினா, 2020ல் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாக சர்ச்சையில் சிக்கி விசாரணைக்கு ஆஜரானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications