இந்தியா எதிர்ப்பு: நேபாள அமைச்சர் ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்புத் துறை திடீர் பறிப்பு
காத்மாண்டு: இந்தியா எதிர்ப்பு நிலையில் தீவிரப் போக்குடன் செயல்பட்டு வந்த நேபாள துணை பிரதமரான ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்புத் துறையை பறித்து அதிரடி காட்டியுள்ளார் பிரதமர் ஒலி.
இந்தியா- நேபாளம் இடையேயான நல்லுறவை சீர்குலைப்பதில் சீனா மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. சீனாவின் தூண்டுதலில் இந்தியாவை மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சராக இருந்த துணை பிரதமர் ஈஸ்வர் போக்ரால்.

இந்தியாவை சீண்டிய நேபாளம்
இந்திய நிலப்பகுதிகளான கலபானி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகியவற்றை நேபாளம் தமக்கு உரியதாக கொண்டாடி வருகிறது. இதனையே அந்த நாட்டு வரைபடத்திலும் இணைத்திருந்தது. இதனை இந்தியா மிக கடுமையாக எதிர்க்கவும் செய்தது.

இந்திய ராணுவத்தில் கலகம் ஏற்படுத்த முயற்சி
ஒருகட்டத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் கூர்கா படைப்பிரிவினரை மத்திய அரசுக்கு எதிராக தூண்டிவிடும் கலகவேலைகளையும் பகிரங்கமாக செய்தவர் நேபாள பாதுகாப்புத் துறை அமைச்சர் ஈஸ்வர் போக்ரால். இதனால் இந்தியா- நேபாளம் இடையேயான உறவில் இதுவரை இல்லாத மிகப் பெரிய விரிசல் விழுந்தது.

சர்ச்சை அமைச்சரின் இலாகா பறிப்பு
இதற்கு நேபாளத்தில் கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இதனால் பிரதமர் ஒலியின் பதவியும் பறிபோகும் சூழ்நிலை உருவானது. இதனால் இந்திய எதிர்ப்பு நிலையை சற்றே நேபாள பிரதமர் ஒலி அடக்கி வாசித்து வந்தார். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அமைச்சர் ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்புத் துறை பறிக்கப்பட்டிருக்கிறது.

ராணுவ தளபதியின் நேபாள பயணம்
ஒலியின் அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக ஈஸ்வர் பொக்ரால் நீடிப்பார் என்றும் அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ராணுவ தளபதி நரவனே அடுத்த மாதம் நேபாளம் செல்ல உள்ள நிலையில் அந்த நாட்டு பிரதமர் ஒலி இந்த திடீர் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார். இதன் பின்னராவது இந்தியா-நேபாளம் இடையேயான உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications