நேபாளத்தில் மீண்டும் உக்கிரமடைந்த மாதேஸிகள் போராட்டம்- போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் பலி!
காத்மண்டு: நேபாளத்தில் இந்திய வம்சாவளியினராகிய மாதேஸிகள் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் பலியானார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
நேபாளத்தில் புதிய மதச்சார்பற்ற அரசியல் சாசனம் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் 7 மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் நேபாளத்தில் வாழும் இந்திய வம்சாவளியினராகிய மாதேஸிகள் புதிய அரசியல் சாசனப்படி தாங்கள் இரண்டாந்தர மக்களாக நடத்தப்படுவதாக கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

கடந்த 40 நாட்களாக நடைபெற்று வரும் கிளர்ச்சியில் 50 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இந்தியாவில் இருந்து நேபாளத்துக்குள் செல்லும் பிரதான நுழைவு வாயிலையும் மாதேஸிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்தனர். இதனால் இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு டிரக்குகள் தேங்கி நிற்கின்றன.
இதற்கு இந்தியாவும் ஆதரவு தெரிவிப்பதாக நேபாளம் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் மாதேஸிகளின் போராட்டத்தை ஒடுக்க நேபாள அரசு முடிவு செய்தது. இன்று அதிகாலை மாதேஸிகள் பிடியில் இருந்த எல்லையை தங்கள் வசம் கொண்டு வந்த நேபாள பாதுகாப்புப் படையினர் இந்திய பகுதிக்குள் டிரக்குகளை செல்ல அனுமதித்தனர். இருப்பினும் மாதேஸிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பலியானார். பீகாரைச் சேர்ந்த ஆசிஷ் குமார் என்ற அம்மாணவர் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
எல்லையில் நின்று கொண்டிருந்த போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி அம்மாணவர் உயிரிழந்தார். இந்த மோதலில் பலரும் படுகாயமடைந்துள்ளனர். இதனால் நேபாள எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications