இமயமலையில் ராணுவத்தினருக்கு தென்பட்டது பனிமனிதனின் கால்தடமா?.. நேபாள அரசு புது விளக்கம்!
Recommended Video
காத்மாண்டு: இமயமலையில் இந்திய ராணுவத்தினரின் கண்களில் பட்டது எட்டியின் கால்தடமா இல்லையா என்பது குறித்து நேபாள அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
எட்டி எனப்படும் ராட்சத பனிமனிதன் இமயமலை பனிச்சரிவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. நேபாள மக்கள் இந்த பனிமனிதனை கடவுளாகவே கருதுகின்றனர்.
இந்த நிலையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் கடந்த 9-ஆம் தேதி மர்மமான முறையில் ராட்சத அளவிலான கால் தடங்களை பார்த்துள்ளனர்.

புகைப்படம்
அவை 32-க்கு 15 அங்குலம் கொண்டவையாக இருந்தன. இதை அப்படியே புகைப்படமாக எடுத்து அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இந்த கால்தடம் மகாலு முகாம் அருகே இருந்ததாக கூறியிருந்தது. இதை படித்த நெட்டிசன்கள் சிலர் ஆஹா ஓஹோ என பாராட்டினர்.

அரசு
இன்னும் சிலரோ இந்த காலத்தில் இதுபோல் மூடநம்பிக்கைகளை பரப்பலாமா என கேள்வி எழுப்பினர். பெரும் பேசும் பொருளாக இருந்த எட்டியின் கால் தடம் குறித்து இந்திய ராணுவத்தினர் பதிவை நேபாள அரசு மறுத்துள்ளது.

எட்டியின் கால்தடம்
இதுகுறித்து நேபாள ராணுவ செய்தி தொடர்பாளர் பிக்யான் தேவ் பாண்டே கூறுகையில் இந்திய ராணுவத்தின் ஒரு குழுவினர் எட்டியின் கால்தடங்களை பார்த்ததாக கூறுகின்றனர். அந்த ராணுவத்தினருடன் எங்களது குழுவினரும் சென்றனர்.

ராட்சத தடங்கள்
உள்ளூர்வாசிகளுடன் இணைந்து அந்த கால் தடம் என்னவென்பதை அறிய முயற்சித்தோம். அப்போது அது காட்டுக் கரடியின் கால் தடம் என தெரிவித்தனர். இது போன்ற ராட்சத தடங்கள் இப்பகுதிகளில் அடிக்கடி தென்படும் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications