துரத்தும் துயரம்..16 ஆண்டு கழித்து கணவரை போலவே.. நேபாளத்தில் விமான விபத்தில் உயிரிழந்த பைலட் அஞ்சு
காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொடூர விமான விபத்தில் சுமார் 68 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த பெண் விமானி குறித்தும் அவரது கணவர் குறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் மிக மோசமான ஒரு விமான விபத்து நேற்று முன்தினம் நடந்தது. அங்கு 72 பேருடன் புறப்பட்டுச் சென்ற ஏடிஆர் 72 விமானம் சேதி ஆற்றின் கரையில் விழுந்து நொறுங்கியதில் மிக மோசமான இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விமானத்தில் மொத்தம் 72 பேர் பயணித்த நிலையில், அவர்களில் இதுவரை 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.

விமான விபத்து
நேபாள வரலாற்றில் நடந்த மிக மோசமான விபத்தாக இது இருக்கிறது. சிறிய ஏடிஆர் 72 ரக விமானம் நேபாளத்தில் விபத்தில் சிக்குவது இதுவே முதல்முறையாகும். விமானம் தரையிறங்கத் தொடங்கிய போது அங்குள்ள பொக்காரா புதிய ஏர்போர்டிற்கும் பழைய விமான நிலையத்திற்கும் ஓடும் சேதி ஆற்றின் கரையில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக வரிசையாகப் பல ஷாக் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகிறது. இந்த விபத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் விசாரணை ஆரம்பித்து நடந்து வருகிறது.

விமானி
இன்று தான் விமானத்தின் கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விமானத்தை இயக்கிய பைலட் குறித்து ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் கோ பைலட்டாக இருந்தவர் அஞ்சு காதிவாடா. இவரது கணவரும் இதே எட்டி விமான நிறுவனத்தில் பைலட்டாக பணிபுரிந்தவர் கடந்த 2006இல் அவர் இயங்கிய விமானம் இதேபோல தரையிறங்க சில நிமிடங்களுக்கு முன்பு கீழே விழுந்து விபத்திற்குள்ளானது.

கணவர்
கணவரை இழந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் 2010இல் அதே எட்டி விமான நிறுவனத்தில் பைலட்டாக சேர்ந்தார். 44 வயதான அஞ்சு காதிவாடா கடந்த 12 ஆண்டுகளாக எட்டி விமான நிலையத்தில் தான் பணிபுரிந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, விபத்தில் சிக்கிய ஏடிஆர் 72 விமானத்தில் அஞ்சு காதிவாடா துணை விமானியாக இருந்தார். நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நேபாளத்தில் நடந்த மிக மோசமான விபத்தாக இது இருக்கிறது. இந்த விமானத்தில் மொத்தம் 72 பேர் பயணித்த நிலையில், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.

இன்சூரன்ஸ் தொகையில் விமானி லைசென்ஸ்
இது குறித்து எட்டி விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா கூறுகையில், "அஞ்சுவின் கணவர் தீபக் போக்ரெல், 2006ஆம் ஆண்டு ஜம்லாவில் ஏற்பட்டு ஒரு விபத்தில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த போது கிடைத்த இன்சூரன்ஸ் தொகையை வைத்தே அவரது மனைவி அஞ்சு விமானியாக பயிற்சி பெற்றார். இப்படித்தான் அவர் லைசென்ஸ் பெற்றார். அவர் 6,400 மணி நேரத்திற்கும் மேல் விமானத்தை இயக்கி அனுபவம் உள்ளது. அவர் இதற்கு முன்பும் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான பொக்காராவிற்கு பல முறை விமானத்தை இயக்கியுள்ளார்" என்றார்.

அனுபவசாலி
தற்போது விபத்தில் சிக்கிய எட்டி ஏடிஆர் 71 விமானத்திற்குக் கமல் என்பவர் கேப்டனாக இருந்துள்ளார். அவருக்கு சுமார் 21,900 மணி நேரத்திற்கு மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளது. அவரது உடல் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. துணை பைலட்டாக இருந்த அஞ்சுவின் உடல் இதுவரை மீட்கப்படவில்லை. இருப்பினும், இந்த கொடூர விபத்தில் யாருக்கும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தைரியமானவர்
இது தொடர்பாக எட்டி நிறுவனத்தில் பணிபுரியும் அஞ்சுவின் நண்பர் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை, அவர் ஒரு இன்ஸ்டிரக்டர் பைலட்டுடன் விமானத்தை இயக்கினார். விமானம் பொதுவாக இப்படிதான் இயக்கப்படும். அவர் எந்த பணிக்கும் தயாராகவே இருந்தார். அந்தளவுக்குத் துணிச்சலான ஒரு பெண் அவர். இப்போது விபத்து நடந்த பொகராவுக்கும் அவர் ஏற்கனவே பல முறை விமானத்தை இயக்கியுள்ளார்" என்றார். விமான விபத்தில் உயிரிழந்த கணவரின் இன்சூரன்ஸில் கிடைத்த பணத்தை வைத்து விமானியாக பயிற்சி பெற்று, குடும்பத்தைத் தலைமை தாங்கி வந்த பெண்ணும் அதேபோல விமான விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன காரணம்
விபத்து ஏற்பட்ட போது வானிலை தெளிவாகவே இருந்துள்ளது. இதனால் மோசமான வானிலை விபத்திற்குக் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. தொழில்நுட்ப காரணங்களால் விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளது. இது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. உலகில் அதிக விமான விபத்துகள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் உள்ளது. கடந்த 2000 ஆண்டு முதல் மட்டும் அங்கு விமான விபத்தில் 350 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications