உலகக்கோப்பையின் மகத்தான கதை.. "1 ரன்னுக்காக நடந்த போராட்டம்" நெதர்லாந்து வீரருக்கு குவியும் பாராட்டு
விக்டோரியா: இலங்கை அணிக்கு எதிராக நெதர்லாந்து அணியின் வான் டர் மெர்வ் நடத்திய போராட்டம் உலகக்கோப்பையின் மகத்தான கதைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடர் முதல் நாளில் இருந்தே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இலங்கை அணி நமிபியா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தாலும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது.
அதேபோல் நெதர்லாந்து அணியும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நமிபியா ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்ததால், இலங்கை - நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி ரசிகர்களிடையே சிறிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.'

இலங்கை அணி பேட்டிங்
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, குசால் மெண்டிஸின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய குசால் மெண்டிஸ் 5 சிக்சர்கள், 5 பவுண்டர்கள் உட்பட 44 பந்துகளில் 79 ரன்களை விளாசினார். இதனால் இலங்கை அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது.

திணறிய நெதர்லாந்து
தொடர்ந்து மேக்ஸ் ஒடைவுட் மட்டும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 15 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய நெதர்லாந்து அணி, அடுத்த சில ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் மறுமுனையில் நின்றிருந்த மேக்ஸ் ஓடவுட் சிக்சர்களாக விளாசி களத்தில் நின்றார்.

நெதர்லாந்து தோல்வி
தொடர்ந்து 17.4 ஓவர்களில் நெதர்லாந்து அணி 9வது விக்கெட்டையும் இழந்தது. இதனால் கடைசி வீரரான வான் டர் மெர்வ்-க்கு காயம் ஏற்பட்டதால், அவர் பேட்டிங் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் காயத்தை மறந்து நாட்டுக்காகவும், மேக்ஸ்-ன் போராட்டத்திற்காகவும் களமிறங்கியது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தாலும், கடைசி ஒரு ஓவர் இந்த உலகக்கோப்பை தொடரின் மகத்தான கதையாக மாறியுள்ளது.

வான் டர் மெட் போராட்டம்
நடக்கவே முடியாமல் மைதானத்திற்கு வந்த வான் டர் மெர்வ், மேக்ஸ் ஓடவுட்-க்கு ஏற்றாற்போல் எதிர்முனையில் உதவியாக நின்றார். கடைசி ஓவரில் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பேட்டிங் செய்த மேக்ஸ் 1 ரன் எடுத்து எதிர்முனைக்கு சென்றார். இதனால் அடுத்த பந்தில் வான் டர் மெர்வ் 1 ரன் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ரசிகர்கள் பாராட்டு
அந்த பந்து பேட்டில் படவில்லை என்றாலும், ரன் அவுட் ஆக வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிந்தும் எதிர்முனைக்கு வான் டர் மெர்வ் ஓடினார். இறுதியில் காயத்தோடு அந்த 1 ரன்னுக்காக அவர் ஓடிய போராட்டம் வெற்றியும் பெற்றது. இதனை மைதானத்தில் இருந்து பார்த்த அனைத்து ரசிகர்களும், வான் டர் மெர்வ் எப்படியாவது அந்த ரன்னை எடுத்துவிட வேண்டும் என்று விரும்பியது அப்போது எழுந்த கைதட்டல்களிலேயே தெரிந்தது.

ஹர்ஷா போக்ளே சொன்ன வார்த்தை
இதனை பார்த்து வர்ணனை செய்துகொண்டிருந்த ஹர்ஷா போக்ளே, வான் டெர் மெர்வ் அந்த ரன்னை முடிக்க முயற்சிப்பதைப் பார்ப்பது தான் நாம் இந்த விளையாட்டை பார்ப்பதற்கான முக்கிய காரணம். அந்த ரன்னை எடுக்க சாத்தியமில்லை என்பது தெரிந்தும், அவர் காயத்தோடு வலியை தாங்கிக் கொண்டு ஓடினார். எப்படியாவது அந்த ஒரு ரன்னை எடுத்துவிட வேண்டும் என்று மன உறுதியே அந்த ரன்னை எடுக்க அவருக்கு துணையாக இருந்தது என்று பாராட்டினார்.
ஹர்ஷா போக்ளே சொல்லிய வார்த்தைகள் தொலைக்காட்சியில் ஆட்டத்தை பார்ப்போருக்கும் மெய் சிலிர்க்க வைத்தது. முடியாததை முடிப்பதற்கான மன உறுதியை கொடுக்கும் வல்லமை விளையாட்டிற்கு மட்டுமே உண்டு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications