புல்லட் புரூப் பேஷன் உடைகள் விற்பனையில்.. விலை ரூ.1.6 லட்சம் மட்டுமே
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் குண்டு துளைக்காத ஃபேஷன் உடைகள் விற்பனை செய்யும் கடை திறக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் உள்ள எய்ந்தோவன் நகரில் பனமெரா என்ற குழுமம் குண்டு துளைக்காத ஃபேஷன் உடைகள் விற்பனை செய்யும் கடையை திறந்துள்ளது. இத்தகைய கடை நெதர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இந்த கடையில் கொலம்பியாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கும் குண்டு துளைக்காத ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றது. அந்த ஆடைகள் பார்ப்பதற்கு சாதாரண ஆடைகளைப் போன்றே உள்ளது.
இது குறித்து ஆடை தயாரிக்கும் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஸ்டாஸ் டி விக்ஸ் கூறுகையில்,
குண்டு துளைக்காத ஆடைகள் நகைக்கடைகள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட ஆபத்து ஏற்படும் இடங்களில் பணிபுரிவோருக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இது குற்றவாளிகளுக்காக அல்ல என்றார்.
பனமெரா குழுமம் கூறுகையில்,
ஜனவரி மாதம் பாரீஸில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து குண்டு துளைக்காத ஆடைகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. பாரீஸ் சம்பவத்தை அடுத்து குண்டு துளைக்காத ஆடைகள் பற்றி 150க்கும் மேற்பட்டோர் எங்களை தொடர்பு கொண்டு கேட்டனர். பெல்ஜியம் மற்றும் பிரான்ஸில் இருந்து மக்கள் எங்களை தொடர்பு கொள்கிறார்கள் என்றது.
அந்த கடையில் விற்பனையாகும் குண்டு துளைக்காத ஆடையின் குறைந்தபட்ச விலையே ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.