பூமிக்கு அடியில் உறங்கும் படுபயங்கரமான பூகம்பம்... இந்தியா, வங்கதேசம், மியான்மருக்கு பேராபத்து!
டாக்கா: வங்கதேசத்தை மையமாகக் கொண்டு மிக பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பூகம்ப அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கதேசமும் கிழக்கு இந்தியாவும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிப் படுகைகள் மீது அமைந்துள்ளன. இந்த பகுதிகள் நிலநடுக்கத்தை தாங்க முடியாத லேசான பகுதிகள்.
தற்போது இந்த பகுதிகளில் கீழே உள்ள டெக்கானிக் பிளேட் எனப்படும் தட்டுகளின் அழுத்தம் மிகவும் அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள் உள்ளன என்கின்றனர் புவியியல் ஆய்வாளர்கள்.
இதனால் மிக பயங்கரமான பூகம்பம் ஒன்று ரிக்டரில் 8.2 முதல் 9 அல்லது 9-க்கும் அதிகமான அளவுக்கு பதிவாகும் அபாயம் உள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தியாவின் பெரும்பகுதிகளைக் கொண்டுள்ள ராட்சத கண்டத் தட்டு வடக்கு நோக்கி முட்டி மோதி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மோதலே இமயமலை வளர்வதற்கு காரணமாகவும் இருந்ததாம்....கடந்த ஆண்டு நேபாளத்தில் 9000 உயிர்கள் பலி கொள்ளப்பட்டதற்கும் காரணமாம்.
இதுவரை சிலி பூகம்பம், 2004 சுமத்ரா பூகம்பம்- சுனாமி, 2011-ல் புகுஷிமா பூகம்பம் ஆகியவை பயங்கர விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. தற்போது வங்கதேசத்தை மையமாக கொண்டு உருவாக காத்திருக்கும் கண்டத்தட்டுகளின் அழுத்தம் என்பது சுமார் 400 ஆண்டுகாலமாக நிகழ்ந்து கொண்டிருப்பதாகும். இதனால் மிகப் பெரிய பூகம்ப பிரளயத்தை இந்தியா, வங்கதேசம் மட்டுமின்றி மியான்மரும் கூட எதிர்கொள்ளத்தான் போகிறது; சுமார் 14 கோடி பேர் பாதிக்கப்படுவர் என எச்சரிக்கின்றனர் புவியியலாளர்கள்.