இந்தியாவுக்கு புதிய தலைவலி.. பாகிஸ்தானிடம் இருந்து ஏவுகணையை இறக்கும் வங்கதேசம்.. பின்னணி என்ன?
டாக்கா: மோதலுக்கு நடுவே நம் நாட்டை குறிவைக்கும் வகையில் பாகிஸ்தானிடம் இருந்து ஷார்ட் ரேஞ்ச் பாலிஸ்ட்டிக் ஏவுகணையை வாங்க வங்கதேசம் முடிவு செய்துள்ளது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணையை வங்கதேசத்துக்கு, பாகிஸ்தான் வழங்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்தியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் நோபல் பரிசு வென்ற முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு அமைந்ததில் இருந்தே நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது. முகமது யூனுஷ் மற்றும் அவரது இடைக்கால அரசில் இருப்பவர்கள் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டது தான் இதற்கு காரணம்.

இந்து உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல் வங்கதேசத்தில் நடக்கிறது. இதனை இடைக்கால அரசு கண்டுக்கொள்ளாமல் உள்ளது. மேலும் மதஅடிப்படைவாதிகளை வைத்து சமூக வலைதளங்களில் நம் நாட்டுக்கு எதிராக கருத்துகளை உதிர்த்து வருகிறது. அதேபோல் பாகிஸ்தானுடன் சேர்ந்து நம் நாட்டுக்கு எதிரான செயல்களை அந்த நாட்டு அரசு தொடங்கி உள்ளது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவு தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தான் அரசுடன் சேர்ந்து இந்தியாவை குறிவைத்து இன்னொரு சதித்திட்டத்தில் வங்கதேசம் ஈடுபட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வங்கதேசம், பாகிஸ்தானிடம் இருந்து ஷார்ட் ரேஞ்ச் பாலிஸ்ட்டிக் ஏவுகணையை வாங்க முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் நாட்டிடம் தற்போது அப்தாலி எஸ்ஆர்பிஎம் (Abdali SRBM) எனும் ஷார்ட் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளது. இந்த ஏவுகணையை தான் வாங்க வங்கதேசம் ஆர்வம் காட்டி வருகிறது.
இதனை ஐடிஆர்டபிள்யூ எனும் இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி விங்க் (IDRW or Indian Defence Research Wing) உறுதி செய்துள்ளது. இதுபற்றி ஐடிஆர்டபிள்யூ சார்பில், ‛‛பாகிஸ்தானின் அப்தாலி எஸ்ஆர்பிஎம் ஏவுகணை என்பது 400 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்டது. இதனால் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க முடியும். பாகிஸ்தான் இந்த ஏவுகணையை வங்கதேசத்துக்கு வழங்க வாய்ப்புள்ளது.
இதன் பின்னணியில் முக்கிய 2 காரணம் உள்ளது. ஒன்று வங்கதேசத்தில், பாகிஸ்தான் தனது உறவை பலப்படுத்த விரும்புகிறது. 2வது நம் நாட்டுடன் பாகிஸ்தானை போல் வங்கதேசமும் மோதி வருகிறது. இதனால் பாகிஸ்தான் இந்த ஏவுகணையை வழங்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த ஏவுகணையை வழங்குவதன் மூலம் அது பாகிஸ்தானுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
ஏனென்றால் இந்த ஏவுகணை குறுகிய தூரம் மட்டுமே சென்று தாக்க முடியும். அப்படிப்பார்த்தால் இந்த ஏவுகணையை பயன்படுத்தி பாகிஸ்தானை குறிவைக்க முடியாது. மாறாக இந்திய மாநிலங்களை நோக்கி குறிவைக்க முடியும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அப்தாலி எஸ்ஆர்பிஎம் ஏவுகணை மூலம் வங்கதேசம் வடகிழக்கு மாநிலம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய நகரங்களை நோக்கி குறிவைக்க முடியும்.
பாகிஸ்தான் வைத்துள்ள இந்த அப்தாலி எஸ்ஆர்பிஎம் ஷார்ட் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை என்பது அந்த நாட்டின் அரசு அமைப்பான ஸ்பேஸ் ரீசர்ச் கமிஷன் மூலம் உருவாக்கப்பட்டது. இருநாடுகள் இடையேயான மோதலின் உடனடியாக பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் இந்த ஏவுகணையை பாகிஸ்தான் தயாரித்து வைத்துள்ளது என்பது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications