நியூயார்க்கில் மக்களுடன் ஐக்கியமான மோடி: திணறிய பாதுகாப்பு அதிகாரிகள்
நியூயார்க்: நியூயார்க் நகரில் தன்னை பார்க்க காத்திருந்த மக்களுடன் மக்களாக கலந்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது பாதுகாப்பு அதிகாரிகளின் வேலையை கடினமாக்கிவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடி பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஹோட்டல் வாசல் முன்பு மோடியை காண மக்கள் கூட்டம் கூடியது. அவர் காரில் வந்து இறங்கியதை பார்த்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் மோடி, மோடி என்று கரகோஷம் எழுப்பினர்.
மக்களை பார்த்த மோடி குஷியில் அவர்களிடம் போய் சாதாரணமாக பேசினார். இதனால் மோடியின் பாதுகாப்புக்கு வந்த அதிகாரிகள் தான் கஷ்டப்பட வேண்டியதாகியது. இந்த வாரம் நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள 140 பிரதமர்கள், அதிபர்கள், ராஜ குடும்பத்தினர் வந்துள்ளதால் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வர்மஸ்
பிரபல புற்றுநோய் நிபுணரான நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ஹரால்ட் வர்மஸை(74) மோடி வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார். அமெரிக்க தேசிய புற்றுநோய் மையத்தின் தலைவராக இருக்கும் வர்மஸ் 1960களில் உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள மிஷன் மருத்துவமனையில் பணிபுரிந்தவர். வர்மஸை இந்தியாவுக்கு வந்து சுகாதாரம் மற்றும் பொது நலன் ஆய்வுகளில் உதவி செய்யுமாறு மோடி கேட்டுக் கொண்டார்.
புகைப்பிடித்தலுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததற்காக வர்மஸ் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.