இது என் புதிய உடல்.. நான் நித்தியானந்தா 2.O - சாவே பயந்து ஓடிருச்சு டா! என்னென்ன சொல்றாரு பாருங்க
கைலாசா: 3 மாதங்களுக்கு பிறகு குருபூர்ணிமா நிகழ்வில் தோன்றிய நித்தியானந்தா, புதிய உடலில் மாறி வந்திருப்பதாக பேசி இருக்கிறார்
சர்ச்சைகளுக்கு பெயர்போன சாமியார் நித்தியானந்தா, தனது பக்தர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்தே மாயமான நித்தியானந்தா, கொரோனா ஊரடங்கின்போது யூடியூபில் தோன்றினார்.
நித்தி கம்மிங்.. கைலாசாவில் குருபூர்ணிமா! “நித்தியானந்தா” நிச்சயம் வராராம் -அடித்துசொல்லும் சீடர்கள்
கைலாசாவில் நித்தியானந்தா
கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி கொடி, சின்னம், அமைச்சகங்களை அறிவித்த நித்தியானந்தா, பாஸ்போர்ட் பெறவும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் அழைப்பு விடுத்தார். இந்தியாவில் தேடப்படும் நித்தியானந்தா எப்படி தப்பினார்? கைலாசா எங்கிருக்கிறது? ஒருவேளை அவர் இந்தியாவில் இருந்துகொண்டே பேசுகிறாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழத் தொடங்கின.
வைரலான பேச்சுக்கள்
கைலாசா ஆப்பிரிக்கா அருகே உள்ள ஒரு தீவு என்ற ஒரு தகவலும் பரவியது. கைலாசா என்ற யூடியூப் சேனலில் நித்தியானந்தா தனது பக்தர்களுக்கு உபதேசம் வழங்கும் வீடியோக்களும் வெளியிடப்பட்டு வந்தன. அவரது பேச்சுக்கள் அனைத்தும் தினசரி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி நகைச்சுவையையும் விவாதத்தையும் ஏற்படுத்தின. ஆனால், அடுத்த சில மாதங்களில் நித்தியானந்தா குறித்தும், கைலாசா குறித்தும் எந்த தகவலும் வெளிவரவில்லை.
நித்தியானந்தா உடல்நிலை
இதற்கிடையே கடந்த சில வாரங்கள் முன்பாக நித்தியானந்தாவின் உடல் நிலை மோசமடைந்து இருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் பரவியது. அவர் சமாதி நிலைக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவர் ஜூலை 13 ம் தேதி குருபூர்ணிமா நிகழ்வில் நிச்சயம் பக்தர்கள் மத்தியில் பேசுவார் என்று அவரது சீடர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.
குருபூர்ணிமா நிகழ்ச்சி
இந்த நிலையில் நேற்று குருபூர்ணிமாவை முன்னிட்டு கைலாசாவின் யூடியூப் சேனலில் நித்தியானந்தா மீண்டும் 3 மாதங்களுக்கு பிறகு பேசினார். முகம் முழுக்க தாடியுடன், ஆங்கிலத்தில் பேசும்போது ஒரு தலைப்பாகையும், தமிழில் பேசும்போது வேறொரு தலைப்பாகையும் அணிந்திருந்தார் நித்தியானந்தா. தொடக்கத்தில் நகைகளை அணிந்திருந்த அவர், சிறிது நேரம் கழித்து நகைகள் இன்றி பேச்சை தொடர்ந்தார்.
நித்தியானந்தா 2.O
அப்போது பேசிய நித்தியானந்தா, "இது அப்டேட்டான புதிய ஆரம்பம். 42 ஆண்டுகளுக்கு பின் மேம்படுத்தப்பட்ட புதிய தொடக்கத்தை வைக்கிறேன். கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் ஜூலை 13 ஆம் தேதி வரை என் உடல், மூளை அனைத்தும் மாறி இருக்கிறது. இது என்னுடைய புதிய உடல். அதை தவறாக பலரும் வெளிப்படுத்தினார்கள். கைலாசாவும் அப்டேட் ஆகியுள்ளது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி லிங்கோபத்வரை ஒளியாக நான் பார்த்தவுடன் அனைத்தும் மறந்துவிட்டது.
சாவுக்கே பயம்
சாவே என்னை பார்த்தால் பயந்து ஓடும்டா.. நான் மாறவில்லை. உடல் மாறியுள்ளது. என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தை காண்பீர்கள். இறப்பு கூட உங்களுக்கு அதிக புரிதலை தந்து மனிதராக மாற்றும். உங்கள் உடல் இறப்பதற்கு முன் உங்கள் மன பல முறை இறப்பது நல்லது. அப்போதுதான் வெவ்வேறு வாழ்கையை ஒரே உடலில் வாழலாம். இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை. என்றார்.