9.8 ரிக்டர் பூகம்பம் வரும்... கலிபோர்னியா காணாமல் போகும்... பீதி கிளப்பும் டச்சு ஆய்வாளர்!
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 9.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படப் போவதாக டச்சு ஆராய்ச்சியாளர் கூறியுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தகவலை விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இன்று மாலை சுமார் 4 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என டச்சு ஆராய்ச்சியாளர் பிராங்க் ஹோபர்பீட்ஸ் என்பவர் கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.
இந்த வீடியோவில் கலிப்போர்னியாவில் ஏற்படும் நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 9.8 ஆக இருக்கும் என்றும், இந்த நிலநடுக்கம் மூலம் பூமி, சந்திரனுக்கு இடைப்பட்ட கிரகமைப்பு மாறும் என்றும் பிராங்க் தெரிவித்திருந்தார்.

சாத்தியமில்லாதது...
ஆனால், இது சாத்தியமில்லாதது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதோடு, பிராங்க் கூறியது போன்று கலிபோர்னியாவில் உடனடியாக நிலநடுக்கம் ஏற்படுவதற்குரிய சாத்தியக் கூறுகள் ஏதும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பயங்கர நிலநடுக்கம்...
சுமார் 28 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில், நிலநடுக்கத்தால் கலிபோர்னியா மாகாணமே கடலுக்கு அடியில் சென்று விடும் என்றும், ஜப்பானில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு சுனாமி தாக்கும் என்றும் அவர் மிரட்டியிருந்தார். இந்த வீடியோவை 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.

கம்யூட்டர் புரோகிராம்...
டிடிரியனம் மீடியாவின் உரிமையாளரும், தலைவருமான பிராங்க், சோலார் சிஸ்டம் ஸ்கோப் என்ற கம்யூட்டர் புரோக்கிராம் மூலம் இந்த நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்ததாக தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை...
மேலும், இந்த நிலநடுக்கமானது கடந்த மாதம் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பயங்கரமானதாக இருக்கும் என அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை செய்தி ஒன்றை அவர் பதிவு செய்துள்ளார்.

28ம் தேதி...
அதில் அவர், வரும் 28ம் தேதி (அதாவது இன்று ), கலிபோர்னியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படப் போகிறது. எனவே, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று மக்கள் தஞ்சம் அடையும் படி பிராங்க் கூறியிருந்தார். இதே முறையைப் பின்பற்றி தான் நாஸ்ட்ராடமஸும் எதிர்காலத்தைக் கணித்துச் சொன்னதாக பிராங்க் தெரிவித்துள்ளார்.

மறுப்பு...
ஆனால், பிராங்கின் இந்த கணிப்பை விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். பிராங்கோ கூறியபடி 28ம் தேதி நிலநடுக்கம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. அந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பவை சாத்தியமாவதற்கு வாய்ப்பில்லை. எனவே யாரும் இது குறித்து அஞ்ச வேண்டாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications