அன்று பேக் டூ பேக் சாம்பியன்! இன்று ஒரு வெற்றிக்கே தடுமாற்றம்! CSKவை நினைத்து வேதனைப்படும் ரசிகர்கள்
சென்னை: ஐபிஎல் 2026 தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல், குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் படுதோல்வியோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது. 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி மோடி மைதானத்தில் குஜராத் அணியிடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. சென்னை அணியின் பார்ம் இந்தளவுக்கு மோசமாக இருக்க என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்!
ஐபிஎல் தொடரில் இந்தாண்டு சிஎஸ்கே அணிக்கு மோசமான ஆண்டாக அமைந்தது.. முதலில் எடுத்தவுடன் 3 தோல்விகளுடன் சிஎஸ்கே, அதன் பிறகு வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில் இருந்தது. ஆனால், அதன் பிறகு அடைந்த தொடர் தோல்விகளால் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.

குஜராத் போட்டி
இந்தச் சூழலில் லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில்.. டூ-ஆர்-டை போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், குஜராத் அணியின் சுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடி அரைசதங்களால் குஜராத் இமாலய ரன்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய சென்னை அணி வெறும் 14 ஓவர்களுக்குள்ளேயே 140 ரன்களுக்கு அக்மார்க் முத்திரையுடன் சுருண்டு 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தற்போது புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் சிஎஸ்கே தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
சரிவு
கடந்த 2008 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் விளையாடிய 10 முறையும் பிளே-ஆஃப் சுற்றுக்கு அசத்தலாக முன்னேறிய அணிதான் சென்னை சூப்பர் கிங்ஸ். கடைசியாக 2023ல் எம்.எஸ்.தோனி தலைமையில் தங்களது 5வது ஐபிஎல் கோப்பையை சென்னை வென்றது. அதன் பிறகு, தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகி ருதுராஜிடம் பொறுப்பை ஒப்படைத்ததில் இருந்தே சென்னை அணியின் அசுர வேகம் அடியோடு முடங்கியுள்ளது:
2024, 2025 மற்றும் இந்த 2026 சீசன் எனத் தொடர்ந்து 3 ஆண்டுகளாகச் சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றோடு வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 2020-க்குப் பிறகான கடந்த 7 சீசன்களை உற்று நோக்கினால், சிஎஸ்கே வெறும் 2 முறை மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன!
இந்த சீசனில் சென்னை அணியின் வீழ்ச்சிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சீராக இல்லாததே முக்கிய காரணமாகும். மேலும், முக்கிய வீரர்களின் ஃபார்ம் அவுட், தொடர் காயங்கள் அணியை அடியோடு உடைத்துவிட்டன.
மிக முக்கியமாக, கேப்டன் ருதுராஜின் இக்கட்டான சூழல்களில் களத்தில் நின்று வியூகங்களை வகுக்கக்கூடிய தல தோனி, இந்த சீசனின் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது சென்னை அணிக்குப் பேரிடியாக முடிந்தது. டெத் ஓவர் பிரஷர் சூழல்களில் தோனி காட்டும் மேஜிக் இந்த சீசனில் அடியோடு விடுபட்டிருந்தது.
நெட்டிசன்கள்
இணையத்திலும் நெட்டிசன்கள் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இது தொடரபாக நெட்டிசன் ஒருவர், "அடுத்த சீசனில் பயிற்சியாளர் பிளெமிங் மற்றும் கேப்டன் ருதுராஜை நீக்கவில்லை என்றால் நான் சிஎஸ்கே ரசிகராக இருக்க மாட்டேன். என்ன மாதிரியான பிளேயிங் லெவன் இது? ரசிகர்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள்" என கொதித்துள்ளார்.
அதேநேரம் இன்னொரு நபர் சிஎஸ்கேவுக்கு ஆதரவாக, "முக்கிய பேட்ஸ்மேன், பவுலர் என 6 வீரர்கள் காயமடைந்த நிலையிலும், வீரர்கள் ஃபார்ம் அவுட்டில் தவித்த நிலையிலும் கடைசி போட்டி வரை சிஎஸ்கே போராடியது. அதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்பிரிட். தோற்றாலும் எப்போதுமே சிஎஸ்கேதான்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications