மோடி பிரதமரானாலும் உடனே விசா பெறத் தகுதியானவராக ஆகி விட முடியாது- யு.எஸ்
வாஷிங்டன்: நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வந்தாலும் கூட அதற்காகவே அவர் விசா பெறத் தகுதியானவராக ஆகி விட முடியாது என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
இதன் மூலம் மோடிக்கு அமெரிக்கா வருவதற்கு விசா அளிக்கப்படுமா என்ற விவகாரத்தில் தொடர்ந்து அது தனது பிடியை இறுக்கமாகவே வைத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் பாஸ்கல் கூறுகையில், அமெரிக்க குடியேற்றத் துறை சட்டத்தின் படி, ஒரு நாட்டின் தலைவருக்கும், அரசின் தலைவரும் ஏ1 விசா பெறத் தகுதியானவர்கள் ஆகிறார்கள். அதேசமயம், தனிப்பட்ட யாரும், ஒரு நாட்டின் தலைவராவதன் மூலம், இந்த விசாவைப் பெற தானாகவே தகுதி படைத்தவர்களாக மாற முடியாது. அதற்கு எங்களது சட்டத்தில் இடமில்லை.
அமெரிக்கச் சட்டப்படி சில குறிப்பிட்ட அசாதாரண சூழல்களில், அரசின் தலைவருக்கும், நாட்டுத் தலைவர்களுக்கும் வெளிநாட்டு அரசு அதிகாரிகளுக்கும் சில விதி விலக்குகளை அளிக்க இடமுண்டு.
புதிய இந்திய அரசுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அரசு ஆர்வத்துடன் காத்துள்ளது. வேறு விசா பிரச்சினை தொடர்பாக தற்போது நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை. இந்தியாவில் அமையப் போகும் புதிய அரசுடன் இணைந்து செயல்படுவது குறித்து மட்டுமே நாங்கள் தற்போது அக்கறை காட்டுகிறோம் என்றார் அவர்.
இவரது பேச்சின் மூலம் மோடி பிரதமராகி விட்டால் அதற்காகவே அவருக்கு விசா தர முடியாது என்று அமெரிக்க சூசகமாக சுட்டிக் காட்டியுள்ளதாகவே தெரிகிறது.
குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து மோடிக்கு அமெரிக்கா வருவதற்கு விசா வழங்க அமெரிக்க அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மோடி தலைமையலான புதிய அரசு மத்தியில் அமையும் சூழல் இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் உங்களது நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்குத்தான் பாஸ்கல் இப்படிப் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications