இத்தோடு நிற்காது கருப்பு பண ஒழிப்பு.. தேவைப்பட்டால் இன்னும் இருக்கு அதிரடி: மோடி சூளுரை
ஜனவரியில் இதேபோன்ற ஒரு நிலை மீண்டும் வராது என உறுதியாக சொல்ல முடியாது என்று பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்துள்ளார்.
டோக்கியோ: பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அந்நாட்டு பிரதமர் அபேயுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி உள்ளிட்ட 14 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில் ஜப்பானில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தீவிரமாக யோசித்த பிறகே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற முடிவை எடுத்ததாக கூறினார். சாமானிய மக்கள் சிரமப்பட்டாலும் கூட, அவர்கள் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும் மோடி கூறினார்.

ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்து முன்கூட்டியே யாரிடமும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை நாட்டை தூய்மைப்படுத்தும் ஒன்று எனக்கூறிய மோடி இது யாரையும் கஷ்டப்படுத்துவதற்கு இல்லை என்றார்.
திருமணத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கெல்லாம் இந்த அறிவிப்பு பெரும் சிரமத்தை அளித்துள்ளது. இருப்பினும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளதால் அவர்களை தலை வணங்குகிறேன் என்றார்.
2000 ரூபாய் நோட்டு பதுக்குவதற்கு எளிதாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, கருப்பு பணத்திற்கு எதிராக எனது நடவடிக்கை இத்தோடு நின்று விடும் என நினைக்காதீர்கள். ஏய்ப்பாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் டிசம்பர் 30க்கு பிறகும் எனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கும். ஊழலை ஒழிக்கும் வரை ஒதுங்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். வேறு வகை திட்டங்கள் மூலம் ஊழல் பெருச்சாளிகளை பிடிக்க போகிறாரா அல்லது, 2000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்தால் மீண்டும், இப்போது போட்ட உத்தரவை போல அதையும் செல்லாது என அறிவித்து கருப்பு பண முதலைகளை பிடிக்கப்போகிறாரா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications