தொலைத்தொடர்பில் புதிய புரட்சி.. இனி செல்போன் டவர்களே இருக்காது.. உலகை திரும்பி பார்க்க வைத்த சீனா!
பீஜிங்: தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக புதிய சாதனை ஒன்றை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்களாம். தரையில் செல்போன் கோபுரங்கள் (டவர்கள்) இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது.
உலக அளவில் தொழில் நுட்ப வளர்ச்சியில் அமெரிக்காவுக்கு சவால் கொடுத்து வரும் நாடாக சீனா உள்ளது. வானிலை, சாட்டிலைட், விமானங்கள் என்று பல்வேறு துறைகளிலும் சீனா படுவேகமாக ஆய்வுகளை நடத்தி வருகிறது. விண்வெளியில் தங்களுக்கு எனத் தனியாக விண்வெளி ஆய்வு மையத்தையே கூட அமைத்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

டவர் தேவையில்லை: இந்த நிலையில், தொலைத்தொடர்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் விதமாக ஸ்மார்ட் போன்களை செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக பேசும் வசதியை கொண்டு வர சீனா கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆய்வு மேற்கொண்டது.
விண்ணுடன் இணைத்தல் என்ற திட்டத்தின் கீழ் Tiantong -1 என்ற செயற்கை கோள்களை அனுப்பி இந்த ஆய்வினை சோதனை மேற்கொண்டது. 2016 ஆம் ஆண்டு முதல் இந்த சோதனனையை நடத்தி வந்த சீனா தற்போது இந்த முயற்சியில் வெற்றி கண்டதாக சொல்லப்படுகிறது.
டைண்டாங் செயற்கை கோள்: அதாவது, ஸ்மார்ட் போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளார்களாம். இதன்படி, தரையில் செல்போன் கோபுரங்கள் (டவர்கள்) இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது. தற்போது டைண்டாங் செயற்கைகோள்கள் மூன்று ஏவப்பட்டுள்ளதாம்.
ஹவாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியது: இதன்மூலம் இது ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்கள் வழியாக பேச முடியும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சேட்டிலைட் அழைப்புகளை சப்போர்ட் செய்யும் உலகின் முதல் போனை ஹவாய் நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில், சீனாவின் இந்த கண்டுபிடிப்பு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இதனால், உலக அளவில் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்களை செயற்கை கோள் வசதியுடன் பேசும் வசதியுடன் கொண்டதாக தயாரிக்க ரெடியாகி வருகிறது.
எந்த இடையூறும் இன்றி பேசலாம்: தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது போக ஊரக பகுதிகளிலும் இது பயனுள்ளதாக இருக்கும் என்பது விஞ்ஞானிகள் கருத்தாக உள்ளது. எனவே, மொபைல் போன்களுக்கான நேரடி செயற்கைக்கோள் இணைப்பு உலகம் முழுக்க பிரபலம் ஆகிவிடும் என்றும் கூறினர்.












Click it and Unblock the Notifications