புடினை தடுக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? பரபரப்பை கிளப்பும் உக்ரைன் அதிபரின் மனைவி!
கீவ்: ‛‛ரஷ்ய அதிபர் புடினை தடுக்காவிட்டால் உலகில் யாருக்கும் பாதுகாப்பான இடம் இருக்காது. பொதுமக்களைக் காப்பாற்றுகிறோம் என்ற சாக்குப்போக்கில் நாளை உங்கள் நகரங்களில் ஆக்ரோஷமாக படைகள் நுழையலாம்'' என உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கா கூறியுள்ளார்.
உக்ரைனில் இன்று 14வது நாளாக போர் நடக்கிறது. ரஷ்யா தனது போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என உலக நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் ரஷ்யா அதை கண்டு கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்து உக்ரைனில் படைகளை முன்னேற்றி செல்கிறது.
இதனால் உக்ரைன் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களில் ஒரு தரப்பினர் துப்பாக்கி ஏந்தி தாய்நாட்டை காக்கின்றனர். முதியவர்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.
மோடி செய்த 2 அவசர கால்! கிரீன் சிக்னல் தந்த புடின், செலன்ஸ்கி! உக்ரைன் சுமியில் நடந்த பரபர Operation
பேச்சுவார்த்தை
இதற்கிடையே உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் சுமூக முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இதனால் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் நிலவுகிறது. இதற்கிடையே உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதோடு, ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இது ரஷ்ய அதிபர் புடினை மேலும் கோபமடைய செய்துள்ளது.
உதவி கோரும் உக்ரைன்
இதனால் உக்ரைனில் போர் இன்னும் தீவிரமாகலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன்னெச்சரிக்கையாக தான் பொதுமக்கள் வெளியேறும் வகையில் அங்குள்ள பல நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியும் தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றி உத்வேகம் வழங்குகிறார். மேலும் அவர் உலக நாடுகளின் தலைவர்களில் பேசி வருவதோடு, போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர உதவ வலியுறுத்தி வருகிறார்.
அதிபரின் மனைவி கடிதம்
இந்நிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கா ஊடகங்கள் வாயிலாக உலக நாடுகளுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
வெகுஜன படுகொலை
பிப்ரவரி 24ல் ரஷ்யா படையெடுத்துள்ளது என்ற தகவலோடு கண்விழித்தோம். பீரங்கி வண்டிகள் உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தன. விமானங்கள் எங்களின் விமானப்படை தளங்களில் நுழைந்ததோடு, நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சிறப்பு நடவடிக்கை என ரஷ்யா கூறுகிறது. ஆனால் உண்மையில் இது உக்ரைன் குடிமக்களின் வெகுஜன படுகொலை.
குழந்தைகள் பலி
இதில் மிகவும் பயங்கரமான, கொடூரமான விஷயம் என்னவெனில் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புகளாகும். ஓக்திர்கா தெருவில் 8 வயது ஆலிஸ், கீவ் நகரில் பொலினா தனது பெற்றோருடன் குண்டுவீச்சில் பலியானார். 14 வயது அர்செனி தலையில் காயமடைந்த நிலையில் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்தார். பொதுமக்களுக்கு எதிராக போர் செய்யவில்லை என ரஷ்யா கூறுவதால் இறந்தவர்களின் பெயர்களை கூறி உள்ளேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏராளாமானவர்களுக்கு சிகிச்சை தடைப்பட்டுள்ளது. ஆஸ்துமா, இன்சுலின் செலுத்தி கொள்வோரும் பாதிக்கப்பட்டுள்ளன.
குடியிருப்புகள் இலக்கு
நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறும் நபர்களால் ரோடுகள் நிறைந்து காணப்படுகிறது. சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் சுரங்கங்களில் தஞ்சமடைந்து தவித்து வருகின்றனர். பெண்கள் தங்களின் குழந்தைகளுடன் தரையில் படுத்து கிடக்கின்றனர். கீவ், கார்கீவ் நகரங்களில் இருந்து வெளியான படத்தில் நீங்கள் இதை உணர்ந்திருப்பீர்கள். சில நகரங்களில் குடியிருப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
அமைதியை விரும்பும் உக்ரைன்
உக்ரைன் அமைதியை விரும்புகிறது. மேலும் உக்ரைன் தனது எல்லைகளையும், அதன் அடையாளத்தையும் பாதுகாக்கும். இதை ஒருபோதும் விட்டு கொடுக்காது. ஏவுகணை தாக்குதல்கள் தொடரும் நகரங்களில் இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்கள் பலநாட்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். மனிதாபிமான அடிப்படையில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும், அவர்களுக்கு உதவி செய்யவும் வழி வேண்டும்.
ஆதாரங்கள் முக்கியம்
இதனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் உக்ரைன் வான்வெளியை மூட வேண்டும். தரைப்பகுதியில் நடக்கும் போரை நாங்களே களத்தில் நேருக்கு நேராக சந்தித்து கொள்வோம். ஊடகங்களே, நான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். இங்கு நடப்பதை காட்டுங்கள். உண்மையை காட்டுங்கள். ரஷ்யா நடத்தும் போரில், ஒவ்வொரு ஆதாரமும் முக்கியமானது.
Recommended Video
புடினை தடுக்காவிட்டால்
பொதுமக்களைக் காப்பாற்றுகிறோம் என்ற சாக்குப்போக்கில் நாளை உங்கள் நகரங்களில் ஆக்ரோஷமாக படைகள் நுழையலாம். அணு ஆயுதப் போரைத் தொடங்குவேன் என்று மிரட்டும் ரஷ்ய அதிபர் புடினை தடுக்காவிட்டால் உலகில் யாருக்கும் பாதுகாப்பான இடம் இருக்காது'' என உருக்கமாக கூறியுள்ளார்.