அமைதிக்கான நோபல் பரிசு.. ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்பிற்கு அறிவிப்பு
நார்வே: பல்வேறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டாலும் கூட எப்போதும் அமைதிக்கான நோபல் பரிசு மீது தான் பலருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அமைக்க முயற்சிகளை எடுத்து வரும் ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்படும். இந்தாண்டு ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற துறைகளைக் காட்டிலும் எப்போதும் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படுகிறது என்பதில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இந்தாண்டும் அமைதிக்கான நோபல் பரிசை பெறப் போவது யார் என்பதில் எதிர்பார்ப்பு இருந்தது. மற்ற துறைகளின் நோபல் பரிசு குறித்த அறிவிப்பு ஸ்டாக்ஹோமில் இருந்து அறிவிக்கப்படும்.ஆனால், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் எப்போதும் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து அறிவிக்கப்படும்.
இதற்கிடையே இன்றைய தினம் 2024ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காக இந்த அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்த நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காகவே அமைதிக்கான நோபல் பரிசு இந்த அமைப்புக்கு வழங்கப்படுகிறது.
2ம் உலகப் போர் சமயத்தில் 1945ம் ஆண்டு ஜப்பான் மீது அமெரிக்கா அணுக் குண்டை வீசியது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு அணு ஆயுதங்களின் கொடூரம் குறித்து உலகில் விழிப்புணர்வை ஏற்படுத்த 1956இல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. 1945 அணு ஆயுத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து, இது சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அணு ஆயுத பயன்பாட்டை ஏற்கவே முடியாது என்று உலக நாடுகள் இன்று தீர்க்கமாகச் சொல்கிறது என்றால் அதற்கு இந்த அமைப்புக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.
உலகில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டு 80 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்னும் உலகம் அணு ஆயுதங்களில் இருந்து முழுமையாக விடுபடவில்லை. பல நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இருப்பதே இதற்குக் காரணமாகும். அதிலும் கடந்த சில வாரங்களாக ரஷ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல்- ஈரான் பதற்றம் என இரண்டிலும் இப்போது அணு ஆயுதங்கள் குறித்த பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் மிகச் சரியாக இந்த அமைப்புக்கு அமைதிக்கா நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
முன்பே குறிப்பிட்டது போல அமைதிக்கான நோபல் பரிசு எப்போதும் முக்கிய கவனத்தைப் பெறும். கடந்தாண்டு நர்கீஸ் முகமதி என்பவருக்கு இந்த அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஈரானில் பெண்களின் அடக்குமுறைக்கு எதிராக போரடியத்காக இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கடந்த 2022ல் அலெஸ் பியாலியாட்ஸ்கி என்பவருக்கும் மெமோரியல் மற்றும் சென்ட் ஃபார் சிவில் லிபர்ட்டி ஆகிய அமைப்புகளுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014இல் இந்த விருதை கைலாஷ் சத்யார்த்தி என்ற இந்தியர் பெற்றார். குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்தும் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய ஆற்றிய சேவைகளுக்காகப் பாகிஸ்தானின் மலாலாவுடன் சேர்ந்து கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications