பயிர்கள் அழியாமல் பாதுகாக்க விதைக்களஞ்சியத்திற்கு நார்வே 13 மில்லியன் டாலர் முதலீடு!
ஓஸ்லோ: பருவ நிலை மாற்றத்தால் அழிவை நோக்கி வரும் உணவுப் பயிர்கள் பாதுகாப்பிற்காக ஆர்ட்டிக்கில் அமைக்கப்பட்ட உலக விதை களஞ்சியத்திற்கு நார்வே கூடுதலாக 13 மில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
பூமியில் போரினாலோ இயற்கை பேரழிவுகளாலோ உணவு பயிர்கள் அழியாமல் பாதுகாக்க ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியம் நிரந்தர பனிமண்டலமான ஆர்டிக்கில் 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
பூமிக்கு 400 அடி கீழே நிலக்கறி சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த விதைக் களஞ்சியமான கடந்த திங்கட்கிழமை தனது 10 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இங்கு சுமார் 1 மில்லியன் விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

நார்வே அரசின் நிதியுதவி
நார்வே அரசால் நிதியுதவி செய்யப்பட்டு இந்த விதைக் களஞ்சியமானது செயல்பட்டு வருகிறது. சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த விதைக்களஞ்சியத்தில் இருக்கும் விதைகளை கொடுத்து பயிர் செய்யும் சோதனை 2015ல் வெற்றியடைந்தது.

அழியாமல் பாதுகாக்கும் கிடங்கு
இங்கு நிலவும் நிரந்தர பனி காரணமாக, உலகின் ஏனைய கிடங்குகளில் விதைகள் அழிந்துபோனாலும் இங்கு அவை உயிர்ப்புடன் இருக்கும். உலகின் மிக முக்கிய உணவு ஆதாரங்களான உருளைக்கிழங்கு,நெல்,கோதுமை,பார்லி,கடலை,பருப்பு,முதலியவற்றின் விதைகள் இந்த களஞ்சியத்தில் பிராதானமாக சேமிக்கப்படுகிறது. இது வரை 100 நாடுகளில் இருந்து 20000 வகையான விதைகள் சேமிக்கப்பட்டிருக்கின்றன.

பல்வேறு நாடுகளில் இருந்து
இந்தியா, பாகிஸ்தான், லெபனான், மொரோக்கோ, நெதர்லாந்து, அமெரிக்கா,மெக்ஸிக்கோ, பெலாரஸ், போஸ்னியா,ஹெர்சிகோவினா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து புதிதாக சேர்க்கப்பட்ட 50000 விதைகளையும் சேர்த்து இப்போது உலக களஞ்சியத்தில் இருக்கும் விதைகளின் எண்ணிக்கை 940000 ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4.5 மில்லியன் விதைகள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட களஞ்சியம்
இந்த விதைக்களஞ்சியத்தின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக கூடுதலாக 13 மில்லியன் டாலர் முதலீடு செய்ய நார்வே அரசு திட்டமிட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்னர் பருவநிலை மாறுபாடு காரணமாக விதைக்களஞ்சியத்தை சுற்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கூடுதல் நிதி ஒதுக்கி இதன் வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பின் போது இங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த விதைகள் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications