ஜிக்கா வைரஸை கட்டுப்படுத்த 1.8 பில்லியன் டாலர் ஒதுக்கும் ஒபாமா
வாஷிங்டன்: ஜிக்கா வைரஸ் பரவி வரும் நிலையில் மருந்து கண்டுபிடிக்க, வைரஸ் பரவுவதை தடுக்க 1.8 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க விரும்புகிறார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.
தென் அமெரிக்க நாடுகளில் ஜிக்கா வரைஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி இதுவரை 26 நாடுகளில் ஜிக்கா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில் ஜிக்கா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க, வைரஸ் பரவுவதை தடுக்க 1.8 பில்லியன் டாலர் நிதி ஒதுக்குமாறு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அந்நாட்டு காங்கிரஸை கேட்டுக் கொள்ள உள்ளார்.
இது குறித்து ஒபாமா கூறுகையில்,
ஜிக்கா வைரஸ் பரவுவதை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். கர்ப்பிணிகள் மற்றும் கருத்தரிக்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் கருத்தரிக்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு தான் வைரஸால் அதிக பாதிப்பு என்று தெரிய வந்துள்ளது என்றார்.
பிற நாடுகளுக்கு சென்று நாடு திரும்பிய 50 அமெரிக்கர்களுக்கு ஜிக்கா வைரஸ் தாக்குதல் உள்ளது. காங்கிரஸ் ஒபாமா கேட்கும் நிதியை நிச்சயம் விரைவில் அளிக்கும் என்று நம்புவதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜோஸ்ட் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.