மலேசிய விமானம் தாக்குதல் சம்பவம்: ரஷ்யா மீது ஒபாமா குற்றச்சாட்டு!
நியூயார்க்: 298 பயணிகளுடன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்துக்கு ரஷ்யாவே காரணம் என்று அமெரிக்கா அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.
நெதர்லாந்தில் இருந்து 298 பயணிகளுடன் மலேசியா வந்து கொண்டிருந்த விமானம் கிழக்கு உக்ரைன் வான்பரப்பில் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
உலகை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சியாளர்களின் நோக்கம் என்ன என்று இப்போதே யூகிக்க முடியவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் பேசி வருகிறோம். இது ஒரு உலகளாவிய துயர சம்பவம். எனவே, இதுபற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் இதை ஆதரிக்கிறது. எனவே, ரஷ்யா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் உடன்படச் செய்வோம். இந்த விசாரணை நடக்க வசதியாக, உக்ரைன் அரசும், கிளர்ச்சியாளர்களும் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும்.
விபத்து பகுதிக்குள் விசாரணை குழுவை அனுமதிக்க வேண்டும். ஆதாரங்களை அழிக்கக் கூடாது. கிளர்ச்சியாளர்கள், தரையில் இருந்து பாய்ந்து சென்று இலக்கை தாக்கவல்ல ஏவுகணையை பயன்படுத்தி உள்ளனர். இத்தகைய அதிநவீன ஏவுகணைகளை ரஷ்யாதான் அவர்களுக்கு கொடுத்தது.
அங்குள்ள சூழ்நிலையை ரஷ்யா அதிபர் புதினால் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அவர் அந்த அதிகாரத்தை பயன்படுத்த மறுக்கிறார்.
இச்சம்பவம் தொடர்பாக புதினுடன் நான் பேசியபோது, உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவதால், அதன் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்தேன். உக்ரைனில் பதற்றத்தை தணிக்க தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்போம்.
இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.