சிரியாவுக்கு ராணுவத்தை அனுப்புகிறது அமெரிக்கா... ஒபாமா அதிரடி முடிவு
வாஷிங்டன்: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தனது சிறப்பு நடவடிக்கைகளுக்கான ராணுவத்தை வடக்கு சிரியாவில் அடுத்த மாதம் முதல் களமிறக்க அந்நாட்டு அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக ப்ரீ சிரியா ஆர்மி என்ற கிளர்ச்சிக்குழு உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது.

இதுதவிர அல்நூஸ்ரா முன்னணி, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கமும் சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி உள்ளனர். இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் கூட்டு படைகளும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில்தான் சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான அனைத்து கிளர்ச்சியாளர்கள், தீவிரவாத குழுக்கள் மீது ரஷ்யா அதிரடித் தாக்குதலை நடத்தியது. ரஷ்யா படையினரும் சிரியாவில் குவிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தாக்குதலை பயன்படுத்தி சிரியா ராணுவமும் முன்னேறி வருகிறது.
தற்போது ரஷ்யாவுடன் ஈரான், ஜோர்டான் ஆகிய நாடுகளும் கை கோர்த்திருகின்றன. இந்நிலையில்தான் வடக்கு சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்கா சிறப்புப் படையினரும் களமிறக்கப்பட உள்ளதாக அமெரிக்கா அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளின் யுத்தத்தில் அமெரிக்கா ராணுவத்தை களமிறக்கப்படுவதற்கு தயக்கம் காட்டி வந்தார் ஒபாமா. தற்போது ரஷ்யா, ஈரான், ஜோர்டான் படையினர் சிரியாவில் களமிறங்கியுள்ள நிலையில் அமெரிக்காவும் ராணுவத்தை களமிறக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஒபாமா இம்முடிவை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications