மீண்டும் தீவிரவாத தாக்குதல்? ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பயங்கர துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மர்ம மனிதர் ஒருவர் தொழிற்சாலை ஒன்றில் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. சுமார் 7 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் அந்த மர்ம மனிதரை ஆஸ்திரேலியா போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிட்னியின் தென்மேற்கு பகுதியில் தொழிற்சாலை ஒன்றுக்குள் மர்ம மனிதர் ஒருவர் துப்பாக்கியுடன் இன்று காலை திடீரென நுழைந்தார். பின்னர் கண்மூடித்தனமாக கண்ணில்பட்டவர்களை நோக்கி அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலையை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். உள்ளே நுழைந்த மர்ம மனிதர் வேறு எவரையேனும் பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ளரா? என்பது தெரியவில்லை.
இருப்பினும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு உள்ளே அனுப்பி வைக்கப்பட்டது. தொழிற்சாலைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்பதால் போலீசார் எச்சரிக்கையாக இந்த விவகாரத்தை கையாண்டனர். சுமார் 7 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் அந்த மர்ம மனிதர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே 2014ஆம் ஆண்டு சிட்னி லின்ட் கபே ஹோட்டலுக்குள் புகுந்த தீவிரவாதி மோனிஸ் என்பவர் அங்கிருந்தவர்களை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தார். அவருடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது தோல்வியில் முடிவடைந்தது.
பின்னர் 16 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் கமாண்டோ படையினர் ஹோட்டலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி 11 பேரை மீட்டனர். இதில் தீவிரவாதி மோனிஸ் மற்றும் 2 பிணைக் கைதிகள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications