மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஒரு மாதமாச்சு: இன்னும் கண்டுபிடிக்கவில்லை
பெர்த்: மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. ஆனால் இன்னும் விமானத்தை கண்டுபிடிக்கவில்லை.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.370 239 பேருடன் கடந்த மாதம் 8ம் தேதி சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது. ஆனால் அந்த விமானம் மாயமானது. இரண்டு வார தேடலுக்கு பிறகு விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.
இதையடுத்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணியில் 14 விமானங்கள் மற்றும் 14 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இன்றைய தேடலில் கூடுதலாக 11 ராணுவ விமானங்கள், 3 பயணிகள் விமானங்கள் மற்றும் 14 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய பெருங்கடலில் 2 மணிநேரத்திற்கும் மேலாக கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலி போன்று கேட்டதாக ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் தெரிவித்தது. இதையடுத்து ஒலி வந்த இடத்தில் தேடல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்றுடன் விமானம் மாயமாகி ஒரு மாத காலம் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.