Russia: இந்தியா கைவிடவில்லை.. டிரம்ப் மட்டுமே அப்படி சொல்கிறார்.. கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யா விளக்கம்
மாஸ்கோ: நம் நாட்டுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 18 சதவீதமாக குறைத்தார். அதுமட்டுமின்றி, நம் நாடு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக நம் நாடு உறுதியளித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இதனால் நட்பு நாடான ரஷ்யாவை மத்திய அரசு கைவிடுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். பரஸ்பர வரி என்று 25 சதவீதமும், உக்ரைன் மீது போர் புரியும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அபராத வரியாக 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீதத்தை விதித்தார். தற்போது இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவுக்கான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக டிரம்ப் குறைத்துள்ளார். அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை மொத்தமாக டிரம்ப் நீக்கி உள்ளார். மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் தான் அந்த வரியை நீக்கியதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து வாங்கும் இந்தியா
ரஷ்யாவை எடுத்து கொண்டால் நமக்கு நெருங்கிய நட்பு நாடாகும். இப்படியான சூழலில் டிரம்ப் கூறியது போல் நம் நாடு, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துகிறதா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் இதுபற்றி டிரம்ப் தான் இப்படி கூறி உள்ளாரே தவிர பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு சார்பில் இன்னும் எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து இருந்தாலும் தொடர்ந்து வாங்கி வருகிறது. இருப்பினும் எதிர்காலத்தில்என்ன நடக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் விளக்கம்
இந்நிலையில் தான் கச்சா எண்ணெய் விவகாரம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்காக வர்த்தக தடைகள், வர்த்தகத்தின் மீதான அழுத்தங்களை கொடுப்பதோடு, வரியும் போடுகிறது. இது சரியான நடவடிக்கை அல்ல. இத்தகைய நடவடிக்கை ஏற்புடையது அல்ல.
தகவல் வரவில்லை
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த ஒப்புக்கொண்டதாக டிரம்ப் மட்டுமே கூறி வருகிறார். டிரம்பை தவிர இந்தியாவை சேர்ந்த யாரும் கூறவில்லை. இந்தியா தரப்பில் இதுபற்றி எதுவும் கூறப்படவில்லை.
இந்தியாவிடம் இருந்து இதுதொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. பிற நாடுகளை போல் இந்தியாவுக்கும் தங்களின் வர்த்தகம், வணிகத்தை சுதந்திரமாக மேற்கொள்ள உரிமை உள்ளது. கச்சா எண்ணெயை நாட்டின் தேவைக்கு ஏற்ப யாரிடம் வாங்க வேண்டும் என்ற முடிவெடுக்கும் உரிமை இந்தியாவிற்கு உண்டு'' என்றார்.
கடைசி நிலவரம் என்ன?
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த நம் நாடு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறி வந்தாலும் கூட இன்னும் பிரதமர் மோடி, மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் சார்பில் எந்த கருத்தும் கூறப்படவில்லை. இப்படியான சூழலில் தான் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதனால் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா சார்பில் ரஷ்யாவிடம் இன்னும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதும், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய் வரத்து உள்ளதும் உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications