பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க வீரரின் பெயர் ஓ நெய்ல்... 3 ஆண்டுகளுக்குப் பின் மர்மம் விலகியது !
வாஷிங்டன்: அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் பின்லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க வீரரின் பெயர் ஓ.நெய்ல் என மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தெரிய வந்துள்ளது.
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் இருந்தவர் ஒசாமா பின்லேடன். பாகிஸ்தானில் அபோதாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த இவரை கடந்த 2011-ம் ஆண்டு மே 2-ந்தேதி இரவு அமெரிக்காவின் ‘நேவி சீல்' என்ற அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
பின்னர் அவரது உடல் ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டு சமாதி ஆக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால்,பின்லேடனை சுட்டுக் கொன்ற வீரர் குறித்த தகவல்கள் மட்டும் ரகசியமாக வைக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அந்த மர்மம் விலகியுள்ளது.

23 வீரர்கள்...
பின்லேடனை சுட்டு வீழ்த்த நேவி சீல் அதிரடி படையை சேர்ந்த 23 வீரர்கள் அனுப்பப்பட்டதாகவும், அவர்களில் ஓ நெய்ல் என்ற 38 வயது வீரர் தான் பின்லேடனை சுட்டுக் கொன்றதும் தற்போது தெரிய வந்துள்ளது.

6 பேர் கொண்ட குழு...
அபோதபாத் நகரில் பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில் ஹெலிகாப்டர் மூலம் வீரர்கள் இறங்கியுள்ளனர். அவர்களில் 6 பேர் கொண்ட குழு பின்லேடன் பதுங்கியிருந்த அறைக்கு சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

3 தடவை துப்பாக்கியால் சுட்டார்...
அப்போது வீரர் ஓ‘நெய்ல் பின்லேடனை நேருக்கு நேர் சந்தித்து அவரது தலையில் 3 தடவை துப்பாக்கியால் சுட்டு கொன்றதாகத் தெரிகிறது. இத்தகவலை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் நெய்ல் வெளிப்படையாகக் கூறியுள்ளாராம். தற்போது நெய்ல் ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தவாரம் ஒளிபரப்பு...
இந்தப் பேட்டி அடுத்த வாரம் தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால், முன்கூட்டியே இத்தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

பெயர் கூறாமல் பேட்டி...
இதற்கு முன்னர், கடந்த 2012-ம் ஆண்டு அமெரிக்காவின் எஸ் கொயர் பத்திரிகை பெயர் வெளியிடாமல் இவரது பேட்டியை வெளியிட்டிருந்தது.

பூடகமான தகவல்...
இதேபோல், பின்லேடன் கொல்லப்பட்ட போது அதிரடிப்படையில் இடம் பெற்றிருந்த மற்றொரு வீரர் பிஸ்சோனெட் என்பவர் நோ ஈசி டே என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் அவர் பின்லேடனை சுட்டுக் கொன்றவர்கள் குறித்து பூடகமாகக் குறிப்பிட்டிருந்தார்.

ரகசியம் பத்திரம்...
சமீபத்தில், பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான ரகசியங்களை அதில் ஈடுபட்ட அதிரடிப்படை வீரர்கள் வெளியிடக்கூடாது என பென்டகன் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications