ஆஸ்கரை பறிகொடுத்த பிரியங்கா சோப்ராவின் அனுஜா குறும்படம்.. இந்தியாவின் ஒரே விருதும் போச்சு
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவில் இருந்து பிரியங்கா சோப்ராவின் அனுஜா குறும்படம் மட்டுமே நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்தப் படம் விருதை எதுவும் பெறாதது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் அனைத்து திரைக் கலைஞர்களாலும் கவனிக்கப்படும் விருதென்றால் ஆஸ்கர்தான். ஹாலிவுட்டின் முக்கியமான இரவு என்று ஆஸ்கர் விருதை வர்ணணை செய்வார்கள். ஹாலிவுட் மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சிக்காக மொத்த திரையுலகும் அந்த இரவு ஒன்றிணைவார்கள். ஆஸ்கர் விருதுகள் திரை உலகில் மிகவும் பிரபலமானது.

அந்த வகையில் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 2024 இல் வெளியிடப்பட்ட திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் 23 பிரிவுகளில் இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது.
97வது ஆஸ்கர் அகாடமி விருதுகள் அறிவிப்புக்கு முன்னதாக ரெட் கார்பெட் அணிவகுப்பில் பல்வேறு திரைக் கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த விழாவில் பல்வேறு நாடுகள், பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள், குறும்படங்கள் நாமினேஷன் ஆகியுள்ளன. அதில், இந்தியாவின் அனுஜா குறும்படமும் ஒன்று. இந்தியாவில் இருந்து இந்த ஒரு குறும்படம் மட்டுமே ஆஸ்கருக்கு நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது.
இந்த குறும்படம் டெல்லியில் வசிக்கும் 9 வயது சிறுமி, சிறுமியின் சகோதரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து காட்சியமைக்கப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ர, குனீத் மோங்கா, சுசித்ரா மட்டாய் ஆகியோர் தயாரிப்பில் உருவான இந்த குறும்படம் இந்தியாவில் பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட ஒரே படம் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. ஆனால், குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை ஐ அம் நாட் ஏ ரோபோட் என்ற குறும்படம் தட்டிச் சென்றது. அனுஜா படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்காதது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications