‘நமஸ்தே டிரம்பால் நீங்கள் சாதித்தது இதுதானா’ – ஹெச்1 விசா விவகாரத்தில் மோடியை தாக்கிய ஓவைசி
ஹைதராபாத்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் இந்திய பொருட்களுக்கான அமெரிக்கா வரியை 50 சதவீதம் உயர்த்தியிருந்தார். இதனால் நம் நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் டிரம்ப் அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்காக வழங்கப்படும் ஹெச் 1 பி விசா வருட கட்டணத்தை 1 லட்சம் டாலராக (இந்திய மதிப்பில் 88 ரூ.லட்சம்) உயர்த்தியுள்ளார்.
இதன் காரணமாக அமெரிக்காவுக்காக பணியாற்றும் ஐடி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் விவாதத்தை எழுப்பியுள்ளது. அந்த வகையில் ஹைதராபாத் எம்பி ஓவைசி இதில் டிரம்பை குற்றம் சொல்வதை விட, மத்திய அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி எனமோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "டிரம்ப் ஹெச் 1 பி விசா முறையை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார். 71-72 சதவீதம் ஹெச் 1 பி விசாவை இந்தியர்க்கள் தான் பயன்படுத்துகிறார்கள். இந்தியர்கள் அதிலும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் தான் இந்த விசாவில் அதிகம் பயனடைகிறார்கள். அவர்களுக்கு சராசரியாக 1,20,000 டாலர் வருமானம் கிடைக்கும். இது அவர்களின் குடும்பங்களுக்கு வருமானமாக மாறி சுமார் 125 பில்லியன் டாலர் வரை வருகிறது.
ஒரு தலைமுறையின் வளர்ச்சி முடக்கம்
அதனால் தான் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வைப்பு நிதியில் 37 சதவீதம் பிடிக்கின்றன. முன்னேற்றத்தை நோக்கி பயணித்த ஒரு தலைமுறையின் வளர்ச்சி முடக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பேற்பார்கள். நான் டிரம்ப் மீது குற்றம் சொல்ல மாட்டேன். மத்திய அரசைத்தான் குற்றம் சொல்வேன். நமஸ்தே டிரம்ப் மூலம் மோடி என்ன சாதித்தார்.
இந்தியர்களுக்கு குறி
இந்தியர்களை குறிவைத்துதான் ஹெச் 1 பி விசா நிறுத்தப்பட்டுள்ளது. நாம் அமெரிக்காவை நட்பு நாடாக பார்க்கிறோம். அவர்களும் நம்மை அப்படி பார்க்கவில்லை என்றால் இதை அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி என்று தான் அர்த்தம். சமீபகாலமாக அமெரிக்கா இந்தியா மீது எடுத்த நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு தான் இதையும் பார்க்க வேண்டும்.
தனிமைப்படுத்தப்படும் இந்தியா
அமெரிக்கா - பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தம், சவூதி - பாகிஸ்தான் ஒப்பந்தம் மூலம் உலகளவில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. அண்டை நாடுகளே இந்தியாவுக்கு விரோதிகளாக மாறியுள்ளனர். இந்தியா ஏற்கனவே கத்தார் மற்றும் பல ஆசிய நாடுகளுடன் டாலரற்ற பரிவர்த்தனைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்த நாடுகளுடன் நம் இந்திய ரூபாயில் தான் பரிவர்த்தனை நடக்கிறது இதை நாம் வர்த்தகம் செய்யும் முக்கிய நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
அப்பாவி மக்களுக்கு பாதிப்பு
டிரம்பின் மிரட்டலுக்கு ஒரு அங்குலம் கூட இடம் கொடுக்கக் கூடாது. இதை வைத்து நான் அரசியல் ஆதாயம் தேடவில்லை. ஆனால் அரசு வெளியுறவிலும், தேசிய பாதுகாப்பிலும் அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்திக்கிறது என்று சிந்திக்க வேண்டும். இதனால் பாதிக்கப்படுவது மோடி இல்லை. அப்பாவி பொது மக்கள் தான். உங்களின் உள்நாட்டு அரசியல் லாபங்களுக்காக நீண்ட கால லாபங்களை தியாகம் செய்து விட்டீர்கள். 2014-2024 ஒரு தசாப்தமே உங்களால் இழந்து நிற்கிறோம்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications