பர்ஹான் வானி மறைவு... இரங்கல் தெரிவித்து பாகிஸ்தானில் ஜூலை 19ல் கருப்பு தினம் !
லாகூர்: ஜம்மு-காஷ்மீரில், அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹான் வானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பாகிஸ்தானில் வரும் 19-ஆம் தேதி கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி குழுக்களில் ஒன்றான ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் பர்ஹான் முசாபர் வானி. 22 வயதான இவர் காஷ்மீர் மாநிலத்தின் கமாண்டர் போல செயல்பட்டு வந்தான். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பர்ஹான் வானியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ஜம்மு-காஷ்மீரில் கடந்த 7 நாள்களாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த வன்முறை சம்பவங்களில் 30 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், இதுதொடர்பாக விவாதிப்பதற்காக பாகிஸ்தான் அரசின் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம், லாகூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய நவாஸ் ஷெரீஃப், காஷ்மீர் மக்களின் போராட்டம், சுதந்திரப் போராட்டமாகும். தன்னாட்சி உரிமைக்கான அவர்களது போராட்டத்துக்கு தார்மீக, அரசியல், ராஜரீக ஆதரவை பாகிஸ்தான் தொடர்ந்து அளிக்கும். ஒட்டுமொத்த பாகிஸ்தானும் அவர்களது பின்னணியில் உள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட பர்ஹான் காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தியாகியாவார். இந்தியாவின் அடக்குமுறையால் சுதந்திரப் போராட்டம் மேலும் உத்வேகம் பெறும். காஷ்மீர் பிரச்சினையை சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் சர்வதேச அரங்குக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 7 லட்சம் இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால், காஷ்மீர் மக்களின் போராட்டத்தை அடக்க முடியாது. இந்தியா வசம் உள்ள காஷ்மீர் மக்களின் குரல் மற்றும் போராட்டத்தை ராணுவ நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க முடியாது.இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஜூலை 19-ம் தேதி பாகிஸ்தானில் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications