பாகிஸ்தான் பதிலடி- 17 தீவிரவாதிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு! விரைவில் தூக்கிலிடப்படுகின்றனர்!
இஸ்லாமாபாத்: 17 தீவிரவாதிகளின் கருணை மனுக்களை பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹூசைன் இன்று நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து 17 தீவிரவாதிகளும் விரைவில் தூக்கிலிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளிக்கூடம் ஒன்றில் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேரை சுட்டுப் படுகொலை செய்து வெறியாட்டம் போட்டனர்.

இதனைத் தொடர்ந்து தூக்கு தண்டனை மீதான தடையை நீக்குவதாக கூறிய பிரதமர் நவாஸ் ஷெரீப், தீவிரவாதிகளுக்கு மட்டும் தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று நேற்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹூசைன், தம்முன் நிலுவையில் இருந்த 17 தீவிரவாதிகளின் கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டார். இதனால் 17 தீவிரவாதிகளும் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தீவிரவாத வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு மாகாண அரசுகளுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் லாகூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தீவிரவாதிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் ஏன் கால தாமதமாகிறது என்று சித்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த லாகூர் நீதிமன்றம் இத்தகைய ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால் பாகிஸ்தானில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் தூக்கிலிடப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications