பாகிஸ்தானில் ஆட்சியை கவிழ்க்கும் ராணுவம்? முஷாரஃப் பாணியில் களமிறங்கிய தளபதி.. முடிச்சுவிட ஸ்கெட்ச்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தற்போது பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானை குறிவைத்து ஆப்கானிஸ்தானின் தெஹ்ரீக் இ தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இப்போது பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பலுச் விடுதலை ராணுவம் அதிரடி தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தானில் நடக்கும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் ஆட்சியை கவிழ்க்க அந்த நாட்டின் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் செயல்படுவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் ஆட்சியை கவிழ்க்க தற்போதைய ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு ஏற்கனவே பயன்படுத்திய யுக்தியை தான் அவர் கையில் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் அண்ணனும் மாஜி பிரதமருமான நவாஸ் ஷெரீஃப்பின் ஆட்சியை கவிழ்த்து ராணுவ தளபதியாகவும், பிரதமராகவும் பொறுப்பு வகித்த பர்வேஸ் முஷாரஃப்பின் பாணியை தற்போதைய ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் கையில் எடுத்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளனர். இதுபற்றி முக்கிய தகவல்கள் வருமாறு:
பாகிஸ்தான் மீது தாக்குதல்
பாகிஸ்தானில் தற்போது பிரதமராக இருப்பவர் ஷெபாஸ் ஷெரீஃப். இவர் தற்போது கடினமாக சூழலை எதிர்கொண்டுள்ளார். ஏனென்றால் பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தானை குறிவைத்து சில அமைப்புகள் தாக்குதல்களை தொடங்கி உள்ளன. அதன்படி ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக் இ - தாலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தான் எல்லையில் மோதலை தொடங்கியது. பாகிஸ்தானில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தெஹ்ரீக் இ - தாலிபான் எனும் அமைப்பு தாக்குதலை தொடங்கியது.
தற்போது அந்த அமைப்பு சைலன்ட்டாகி உள்ளது. ஆனால் இன்னொரு அமைப்பு பாகிஸ்தானை குறிவைத்து தாக்கி வருகிறது. அதன் பெயர் பலுச் விடுதலை ராணுவம். இந்த பலுச் விடுதலை ராணுவம் என்பது பாகிஸ்தானில் தான் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை மையப்படுத்தி தான் இந்த பலுச் விடுதலை ராணுவம் செயல்பட்டு வருகிறது. இந்த பலுச் ராணுவத்தை பாகிஸ்தான் அரசு பிரிவினைவாதிகள் என்று அறிவித்துள்ளது.
பலுச் விடுதலை ராணுவம்
இந்த பலுச் விடுதலை ராணுவத்தின் பிரதான கோரிக்கை என்பது பலுசிஸ்தான் மாகாணத்தை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிப்பது தான். இதற்கும் முக்கிய காரணம் உள்ளது. அதாவது பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. இந்த கனிம வளங்களை பாகிஸ்தான் மட்டுமின்றி சீனாவும் அள்ளி செல்வதாக கூறப்படுகிறது. சீனாவின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவாக உள்ளது. இது பலுச் விடுதலை ராணுவத்துக்கு பிடிக்கவில்லை. அதேபோல் பலுசிஸ்தான் மகாணத்தில் பாகிஸ்தான் அரசு வளர்ச்சி பணிகள் செய்யாமல் புறக்கணித்து வருகிறது. இதுவும் பலுச் விடுதலை ராணுவத்துக்கு கோபத்தை கிளப்பி உள்ளது.
ரயில் கடத்தல் - கடும் மோதல்
இதனால் தான் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பலுச் விடுதலை ராணுவம் கிளம்பி உள்ளது. பலுச் விடுதலை ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் கடும் மோதல் நடந்து வருகிறது. சமீபத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய பலுச் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என்று 400க்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்தது. இதில் பாகிஸ்தான் ராணுவம் பலரைமீட்ட நிலையில் 216 பேரை தூக்கிலிட்டு கொன்றதாக பலுச் விடுதலை ராணுவம் அறிவித்தது. ஆனால் அதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதில் உண்மை நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை. குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பலுச் விடுதலை ராணுவம் இடையே மோதல் என்பது உக்கிரமாக நடந்து வருகிறது.
இப்படியான சூழலில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் ஆட்சியை அந்த நாட்டின் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் கவிழ்க்க திட்டம் தீட்டுவதாக கூறப்படுகிறது. தற்போது பாகிஸ்தான் மீது பலூச் விடுதலை ராணுவம் மிகவும் உக்கிரமாக மோதி வருகிறது. மேலும் ஜாபஃர் ரயிலை அவர்கள் கடத்தி சென்றனர். பலுச் விடுதலை ராணுவத்தை எதிர்த்து பாகிஸ்தான் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தால், பலுச் விடுதலை ராணுவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதிருப்தியை வெளிப்படுத்திய ராணுவ தளபதி
இதற்கிடையே தான் சமீபத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டு குழுவில் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிய கருத்துகளை எடுத்துரைத்தார். அப்போது அவர் பாகிஸ்தான் அரசு மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், ‛‛பாகிஸ்தானில் சிறந்த ஆட்சி நடத்தப்பட வேண்டும். குறிப்பாக பயங்கரவாதத்துக்கு எதிராகவும், நாட்டின் சித்தாந்தத்தை நிலைநிறுத்தவும் பலமான அரசு என்பது வேண்டும். ஆனால் தற்போது பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதில் கடினமான சூழலில் பாகிஸ்தான் உள்ளது. பலவீனமான அரசு நிர்வாகம் தான் இதற்கு காரணம். ஏனென்றால் எத்தனை நாட்கள் தான் அப்பாவி மக்கள் பயங்கரவாத தாக்குதலில் பலியாவார்கள்?'' என்று பேசியிருந்தார்.
இதன்மூலம் தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசு என்பது பலவீனமானதாக உள்ளதாக அவர் எடுத்துரைத்தார். இது சர்ச்சையாகி இருந்தது. மேலும் ஆளும் அரசு மீது ராணுவ தளபதி அஜீம் முனீர் அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.
முஷாரஃப் பாணியில் கவிழ்க்க சதி
பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக திரும்புகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியது. இப்படியான சூழலில் தான் தற்போது பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளன. அதில், பாகிஸ்தானில் நடக்கும் ஆட்சியை கவிழ்க்க அசீம் முனீர் திட்டமிடுகிறாரா? இதற்காக அவர் மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், மாஜி ராணுவ தளபதியுமான பர்வேஸ் முஷாரஃப்பின் பாணியை கையில் எடுக்கிறாரா? என்ற கேள்விகளுடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதுதொடர்பாக தற்போது வரை அசீம் முனீர் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இது சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது. இதனால் எக்ஸ்பர்ட்டுகளும், பாகிஸ்தானில் மீண்டும் ராணுவம் ஆட்சியை கவிழ்க்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை செய்துள்ளனர். இது பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
ராணுவம் கவிழ்ப்பது முதல் முறையல்ல
இருப்பினும் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருப்பவர்கள் ஆட்சியை கவிழ்ப்பது என்பது ஒன்றும் புதிது அல்ல. இதற்கு முன்பும் பலமுறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
குறிப்பாக கூற வேண்டும் என்றால் மறைந்த முன்னாள் பிரதமர் பர்வேஷ் முஷ்ரஃப்பை எடுத்து கொள்ளலாம். பாகிஸ்தானும், இந்தியாவும் ஒன்றாக இருந்த சமயத்தில் கடந்த 1943ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் தான் பர்வேஸ் முஷாரஃப். இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நம் நாட்டை விட்டு வெளியேறினார். பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரஃப் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார்.
பர்வேஷ் முஷாரஃப் என்ன செய்தார்?
குறுகிய காலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தில் நல்ல பெயர் பெற்றார். 1990ல் ராணுவ தளபதியானார். துணை ராணுவ செயலர், ராணுவ இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட பதவிகளை எட்டிப்பிடித்தார். 1999ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃப் இருந்தார். இவர் யார் என்றால் தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் அண்ணன் தான். 1999ல் நவாஸ் ஷெரீஃப் பிரதமராக இருந்தபோது இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. இது கார்கில் போராக மாறியது. இதையடுத்து நவாஸ் ஷெரீஃப் கார்கில் போருக்கு பர்வேஷ் முஷாரஃப்பை தலைமை தாங்க உத்தரவிட்டார். பர்வேஷ் முஷாரஃப் தலைமை தாங்கி இந்தியாவை எதிர்க்க தொடங்கினார். இறுதியில் அந்த போரில் பர்வேஷ் முஷாரஃப் ராணுவத்தை வீழ்த்தி நம் நாட்டு ராணுவம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இதையடுத்து கார்கில் போர் தோல்வியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு எதிராக பர்வேஸ் முஷ்ரஃப் திருப்பினார். அமெரிக்காவின் பேச்சை நவாஸ் ஷெரீஃப் கேட்டு போரை முடக்கிவிட்டார். இல்லாவிட்டால் பாகிஸ்தான் வென்று இருக்கும் என்று மக்களிடம் கூறினார். அதோடு நவாஸ் ஷெரீஃப்புக்கு எதிராக ராணுவத்தை ஒன்றிணைந்து ராணுவ புரட்சி செய்தார். அதில் வெற்றியும் பெற்றார். நவாஸ் ஷெரீஃப்பின் ஆட்சி கவிழ்ந்தது. பாகிஸ்தான் அதிபராக பர்வேஷ் முஷாரஃப் பொறுப்பேற்றார். அதன்பிறகு கூட அவர் தான் வகித்த ராணுவ ஜெனரல் பதவியை ராஜினாமா செய்யாமல் அதிபராக இருந்தார். 2008 ம்ஆண்டு வரை அதிபராக பர்வேஷ் முஷாரஃப் பாகிஸ்தானை கட்டுப்படுத்தினார். அந்த வகையில் தான் தற்போது பலூச் விடுதலை ராணுவத்தின் புரட்சி தொடர்பாக ஷெபாஸ் ஷெரீஃப் அரசு மீது குற்றம்சாட்ட தற்போதைய ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் தொடங்கி உள்ளார். இதனால் தான் பர்வேஷ் முஷாரஃப் எப்படி மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் ஆட்சியை கவிழ்த்தாரோ, அதேபோல் அசீம் முனீர் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுகிறாரா? என்பது பாகிஸ்தானில் விவாதத்தை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications