பாகிஸ்தான் அகமதியா முஸ்லிம்கள் பக்ரீத் கொண்டாட தடை! குர்பானி கொடுத்தால் கைது! அத்துமீறும் ஷெரீப் அரசு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், அகமதியா சமூகத்தினர் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அகமதியா சமூகத்தினர் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடக் கூடாது என போலீசார் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். மீறிக் கொண்டாடினால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகை நாளை ஜூன் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இருப்பினும், பாகிஸ்தான் நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தினர் பக்ரீத் கொண்டாட முடியாமல் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். ஏனென்றால் அங்குள்ள அரசே பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடத் தடை விதித்துள்ளது.

பக்ரீத்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், அகமதியா சமூகத்தினர் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அகமதியா சமூகத்தினர் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட மாட்டோம் என்று உறுதிமொழி கொடுக்கவும் போலீசார் வற்புறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் வசிக்கும் 20 லட்சம் அகமதியா மக்கள் நீண்ட காலமாகவே இதுபோல பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருவதாகக் கூறப்படுகிறது.
குர்பானி கொடுக்கக்கூடாது
எப்போதும் பக்ரீத் பண்டிகை சமயத்தில் விலங்குகளைப் பலியிடுவார்கள். ஆனால், அகமதியா முஸ்லிம்கள் குர்பானி (விலங்குகளைப் பலியிடுதல் சடங்கு) கொடுப்பதையும், பிற இஸ்லாமியச் சடங்குகளை தங்கள் வீடுகளில் கூடச் செய்யக்கூடாது என்றும் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர். பஞ்சாப் மாகாண போலீசார் அகமதியா சமூகத்தினரை பக்ரீத் சடங்குகளைக் கடைப்பிடிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வற்புறுத்தியுள்ளனர். மீறினால் 500,000 பாகிஸ்தான் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் உள்ள பல மாவட்டங்களில், அகமதியா சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட மாட்டோம் என்று எழுதிக் கொடுக்கவும் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர். அதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
பாகிஸ்தான் அகமதியா சமூகம்
பாகிஸ்தானில் 20 லட்சம் பேர் கொண்ட அகமதியா சமூகம் நீண்ட காலமாகத் துன்புறுத்தப்பட்டு வருகிறது. 1974ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அகமதியாக்கள்யாரும் முஸ்லிம்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. 1984 அவசரச் சட்டம் அகமதியாக்கள் இஸ்லாமிய மதச் சடங்குகளைப் பின்பற்றினால் அது குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டது. இஸ்லாமிய வாழ்த்துக்களைக் கூறுவது, அகமதியா வழிபாட்டுத் தலங்களை மசூதிகள் என்று அழைப்பது, குர்ஆனை ஓதுவது போன்ற செயல்களையும் குற்றம் என அறிவிக்கப்பட்டது.
அதேநேரம் பாகிஸ்தானில் இதுபோல அகமதியாக்களுக்குதடை விதிப்பது இது முதல்முறை இல்லை. பல காலமாகவே பக்ரீத் சமயத்தில் இதுபோல தடை விதிப்பார்கள். கடந்த ஜூன் 2024இல் பாக். பஞ்சாபில் மட்டும் குர்பானி கொடுத்தாக மட்டும் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த மார்ச் 2024ல் குஷாப்பில் தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களின் சுமார் 100 அகமதியா கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டன.
நீதித்துறை ஆதரவும் இல்லை
பாகிஸ்தானில் போலீஸ் தான் இப்படி என்றால் நீதித்துறையும் கூட அகமதியா சமூகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. சமீபத்தில் அஹ்மதி சமூகத்தினர் இஸ்லாமியச் சடங்குகளைப் போல் கூட்டங்கள் நடத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சொல்லி பஞ்சாப் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு லாகூர் உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்தது.. இது முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் குற்றம் சாட்டியது.
பாகிஸ்தானில் அகமதியா சமூகத்தினர் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டிருப்பது, அவர்கள் அனுபவிக்கும் தொடர்ச்சியான பாகுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. இந்த சம்பவங்கள் அந்த சமூகத்தின் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.












Click it and Unblock the Notifications