தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும்... பாகிஸ்தானுக்கு ஒபாமா அட்வைஸ்
வாஷிங்டன்: பாகிஸ்தான் தனது மண்ணில் தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். இதேபோல், ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் மசார்-இ-ஷெரிப் நகரில் அமைந்து உள்ள இந்திய தூதரகம் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் அதிகாரிகளின் சதி இருப்பதாக ஆப்கான் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்தவாரம் பாகிஸ்தான் பாச்சாகான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் 21 பேர் பலியானார்கள். போலீசாரின் பதில் தாக்குதலில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தச் சூழலில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘பாகிஸ்தான் தனது மண்ணில் தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் கூடுதல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். தீவிரவாத நெட்வொர்க்கை பாகிஸ்தான் சட்டவிரோதமானதாக்க வேண்டும், அழிக்கவேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுக்கவேண்டும்; என்றார்.
மேலும், அப்போது அவர் பதான்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் உடனான பிரதமர் மோடியின் அணுகுமுறையை பாராட்டினார்.