கிளர்ச்சியாளர்கள் முற்றுகையில் பாக். பிரதமர் வீடு- அரசு டிவி அலுவலகம் சூறை-ஒளிபரப்பு நிறுத்தம்!!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பதவி விலக வலியுறுத்தி நடைபெற்று வந்த போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அத்துடன் பாகிஸ்தான் அரசு நடத்தும் பி டிவி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாக கூறி, அவர் பதவி விலக வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடந்த 2 வாரங்களாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது.
மூவர் பலி
நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
நவாஸ் ஷெரீப் வீடு முற்றுகை
இந்நிலையில், நவாஸ் ஷெரீப் வீட்டை நெருங்கி தாங்கள் முற்றுகையிட்டுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
பி டிவி அலுவலகம் சூறை
அத்துடன் பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பி டிவி அலுவலகத்துக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் அதை சூறையாடினர். இதனால் பி டிவி தனது ஒளிபரப்பை நிறுத்தி வைத்துள்ளது.
ராணுவம் தயக்கம்
இந்த வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் தயங்கி வருகிறது. இது ஜனநாயக ரீதியான போராட்டம், ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் என்கின்றனர் ராணுவ அதிகாரிகள்.
ஷெரீப் பதவி விலகுகிறார்?
ராணுவம் இத்தகையதொரு நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில் நவாஸ் ஷெரீப் பதவி விலகுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.