தூதர்கள் சென்ற ஹெலிகாப்டரை சுட்டது நாங்களே-தாலிபான்கள்: மறுக்கும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: ராணுவ ஹெலிகாப்டரை தாலிபான்கள் சுட்டு வீழ்த்தியதாக கூறுவதில் உண்மையில்லை என்று பாகிஸ்தான் நாட்டு ராணுவமும், வெளியுறவுத்துறை செயலரும் கூறியுள்ளனர். என்ஜின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நேற்று ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் நார்வே, பிலிப்பைன்ஸ் நாட்டு தூதர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
அங்குள்ள கில்ஜிட்பால்டிஸ்தான் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மொத்தம் மூன்று ராணுவ ஹெலிகாப்டர்களில் பல்வேறு வெளிநாட்டுத் தூதர்களும், பாகிஸ்தான் அதிகாரிகளும் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். அதில் இரு ஹெலிகாப்டர்கள் பத்திரமாக தரையிறங்கின. ஒரு ஹெலிகாப்டர் மட்டும் விழுந்து நொறுங்கியது. அதில் மொத்தம் 17 பேர் பயணம் செய்தனர். இதில் 11 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.

6 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் நார்வே தூதர் லார்சன், பிலிப் பைன்ஸ் தூதர் டோமினிகோ, மலேசியா மற்றும் இந்தோனேசியா தூதர்களின் மனைவியர், இரு பைலட்கள் என 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். போலந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதர்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

திரும்பிய விமானம்
இதே பகுதி வழியாகத்தான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமானத்தில் செல்ல இருந்தார். திட்டமிட்டபடி இஸ்லாமாபாத்தில் இருந்து அவர் புறப்பட்டார். ஆனால் திடீரென பயணத்திட்டம் மாற்றப்பட்டு அவர் சென்ற விமானம் மீண்டும் இஸ்லாமாபாத் நகருக்கு திரும்பிவிட்டது.

தலிபான் ஒப்புதல்
ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது எங்கள் அமைப்பினர்தான் என்று தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது. பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு வைத்த குறியில், ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அந்த அமைப்பினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகைகளுக்கு தலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது கோரசானி அனுப்பியுள்ள மின் அஞ்சல் செய்தியில், விமானத்தை தாக்கும் ஏவுகணை மூலம் ஹெலிகாப்டரை வீழ்த்தினோம். பிரதமர் ஷெரீப் செல்லும் சிறப்பு விமானத்துக்கு வைக்கப்பட்ட குறியில் ஹெலிகாப்டர் சிக்கிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம் மறுப்பு
எனினும் தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளதை பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்ளும் இது தீவிரவாத தாக்குதல் இல்லை. விபத்துதான் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.

வெளியுறவுத்துறை செயலர்
இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவுச் செயலர், அஜீஸ் அகமது சௌதிரி, ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் சுட்டுவீழ்த்துவதற்கு எந்தவித சாத்தியமும் இல்லை என்றார். என்ஜின் கோளாறு ஏற்பட்டதாலேயே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications