இந்தியாவின் இமயமலையால் பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்! ரூ.80 ஆயிரம் கோடி தங்கம் கிடைக்குதே! ஓ ஜின்னா
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், கடுமையான நிதிச்சிக்கலில் இருக்கும் சூழ்நிலையில், இப்போது ஒரு முக்கியமான செய்திகள் வெளிவந்துள்ளன. பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக் மாவட்டத்தில் சிந்து நதியின் படுகையில் மிகப்பெரிய அளவில் தங்கக் களஞ்சியமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.80,000 கோடியாகும் என்று அந்த நாட்டின் முன்னணி ஊடகமான Dawn News செய்தி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசு நடத்திய ஆய்வில் இந்த தங்கக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தேசிய பொறியியல் சேவைகள் பாகிஸ்தான் (NESPAK) மற்றும் மின்கள் மற்றும் கனிமத் துறை பஞ்சாப் இணைந்து செயல்படுத்த உள்ளன.

NESPAK நிறுவனத்தின் மேலாளர் ஜர்காம் இஷாக் கான் கூறுகையில், "அட்டோக் மாவட்டத்தில் உள்ள இந்துஸ் நதியின் கரையில் 9 தங்கப்பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கான பரிசீலனையும் ஏலத்திற்கான ஆவணங்களும் தயாராக உள்ளன." என தெரிவித்தார்.
புவியியல் அறிஞர்கள் தெரிவித்ததாவது: சிந்து நதி, இந்தியாவின் இமயமலையிலிருந்துதான், தங்கத்தை சுமந்து பாகிஸ்தானுக்குள் பாய்கிறது. வெள்ளப் பெருக்கில் தங்கம் நதிக்கரைகளில் சேர்ந்து சிறிய துகள்களாக மற்றும் Placer Gold உருவாகிறது.
இமயமலை தந்த கொடை
பல நூற்றாண்டுகளாக இந்த நதியின் மண், தங்கம் மற்றும் பிற கனிமங்களால் பண்பட்டுள்ளது. அதுதான் இப்போது பாகிஸ்தானுக்கு லாபமாக மாறியுள்ளது, என்கிறார்கள். எனவே நெட்டிசன்கள் வேடிக்கையாக, ஐயா, ஜின்னா, உங்களால் பாகிஸ்தான் என்ற ஒரு புதிய நாடு உருவாகியது. ஆனால், இந்தியாவின் தங்கம் பாகிஸ்தானுக்கு பயன்படுகிறதே, இதுதான் தாய் வீட்டு சீதனமோ என்று தெரிவிக்கிறார்கள்.
சிந்து நதி திபெத் பீடபூமியில் உள்ள மானசரோவர் ஏரிக்கு அருகில் உற்பத்தியாகிறது. பிறகு இமயமலை வழியாக சிந்து நதி இந்தியாவில் லடாக் பிரதேசத்தின் வழியாக பாய்ந்து, பின்னர் பாகிஸ்தானுக்குள் நுழைகிறது. இமய மலையில்தான் தங்க கனிமங்களின் படிவுகள் சிந்து நதியில் சேர்கிறதாம்.
பாகிஸ்தானின் ஜீவ நாடி
பாகிஸ்தானில் இது கில்கிட்-பால்டிஸ்தான், கைபர் பக்துன்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களின் வழியாக பாய்கிறது. இறுதியாக, சிந்து நதி பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சிக்கு அருகிலுள்ள அரபிக் கடலில் கலக்கிறது. சிந்து நதி பாகிஸ்தானின் மிக நீளமான மற்றும் முக்கியமான நதிகளில் ஒன்றாகும், மேலும் இது விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்திற்கும் முக்கியமானது.
பாகிஸ்தான் தற்போது கடுமையான நிதிச் சிக்கலில் உள்ளது. 2024 டிசம்பரில், நாட்டின் மொத்த வெளிநாட்டு நிதி கையிருப்புகள் $5.43 பில்லியன் மட்டுமே இருந்தன. ஒருவேளை இந்த தங்கம் அகழ்வுத் திட்டம் வெற்றியடைந்தால்,
- பாகிஸ்தானின் தங்க உற்பத்தி அதிகரிக்கும்
- நாட்டு பொருளாதாரம் மேம்படும்
- பண மதிப்பு உயர வாய்ப்பு உள்ளது
முன்னணிப் பொருளாதார வல்லுநர்கள் கூறுவது: "இந்த தங்கக் களஞ்சியத்தை சரியாக பயன்படுத்தினால், பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேறலாம். ஆனால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது." என்கிறார்கள். எதிர்வரும் மாதங்கள் பாகிஸ்தானின் நிதி நிலைமைக்கு மிக முக்கியமானவை. இந்த தங்கக் களஞ்சியம் நாடாளுமன்ற விவாதத்துக்கு வருமா? அரசாங்கம் இதைப் பயன்படுத்திக் கொள்வதற்கான திட்டங்களை எடுக்குமா? என்பதற்கான பதில் விரைவில் வெளிவரும்.












Click it and Unblock the Notifications