"இந்து சிறுமிகளை கடத்தி மதமாற்றம் செய்கிறார்கள்!" பாகிஸ்தான் இந்து எம்பி பரபர! அங்கு என்ன நடக்கிறது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பல இந்து பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக அங்குள்ள இந்து எம்பியான தனேஷ் குமார் பல்யானி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக இருக்கிறது. அங்கு இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அங்கு சிறுபான்மையினருக்கு எதிராகப் பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

கட்டாய மதமாற்றம்: குறிப்பாக இந்து வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், பாகிஸ்தான் நாட்டில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகப் பல சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மைனர் சிறுமிகள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதாகப் புகார்கள் உள்ளன.
இதற்கிடையே அங்கு சிறுபான்மைப் பெண்களை, குறிப்பாக இந்துக்களைக் கட்டாயமாக மதமாற்றம் செய்வது எப்படி முழு வீச்சில் நடந்து வருகிறது என்பதைப் பாகிஸ்தானில் உள்ள இந்து எம்பி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய எம்.பி.யும் மனித உரிமை ஆர்வலருமான தனேஷ் குமார் பல்யானி, இந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகக் கடுமையாக விமர்சித்தார்.
இந்து எம்பி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இதனால் நிலைமை மோசமாக உள்ளதாகச் சாடிய தனேஷ் குமார், இந்து குழந்தைகள் மற்றும் பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் நடப்பதாகச் சாடினார். அவர் மேலும் கூறுகையில், "பிரியா குமாரி கேஸை பாருங்கள். ஆறு வயதுக் குழந்தையைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ளனர். அவர் கடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும், குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சில கேவலமான நபர்கள் இதுபோன்ற செயல்களால் பாகிஸ்தானை அவமதித்துவிட்டனர்.
குரானில், மதத்தில் எந்த நிர்ப்பந்தமும் இருக்கக்கூடாது என்றே இருக்கிறது. உங்கள் மார்க்கம் உங்களுக்கு இருக்கிறது. எனது மார்க்கம் எனக்கு இருக்கிறது. இந்த கேவலமானவர்கள் குரானை கூட மதிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. பாகிஸ்தானின் அரசியல் சாசனம் மீதும் நம்பிக்கை இல்லாமல் இவர்கள் இந்து பெண்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்கிறார்கள்" என்றார். மேலும், கிருஷ்ண பகவான் எப்படி ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்பதை உணர்த்தினார் என்றும் அவர் விளக்கினார்.
முதல்முறை இல்லை: அதேநேரம் பாகிஸ்தானில் உள்ள இந்து சிறுமிகள் மீதான கொடுமைகளுக்கு எதிராகப் பாகிஸ்தான் எம்பி ஒருவர் குரல் எழுப்புவது இது முதல் முறை இல்லை. உண்மையில், பல்வேறு காலங்களில், 1000க்கும் மேற்பட்ட இந்து சிறுமிகள் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

என்ன நடக்கிறது: பாகிஸ்தானில் பெண்கள் பொதுவாக உறவினர்கள் அல்லது கல்யாணத்திற்குப் பெண்களைத் தேடும் ஆண்களால் கடத்தப்படுகிறார்கள். சில சமயம் கடனை திரும்பச் செலுத்தவில்லை என்று கூறி கடன்காரர்கள் கடத்திவிடுவார்கள். அந்த சிறுமிகள் கடத்தப்பட்ட உடன் விரைவில் மதமாற்றம் செய்யப்படுவார்கள். பிறகு சிறுமிகள் விரைவாகத் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். பெரும்பாலும் வயதான ஆண்களுக்குத் தான் திருமணம் செய்து வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற நிகழ்வுகள் அங்குத் தொடர்கதையாகி வருவதாகவும் இதை நிறுத்த உடனடியாக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications