ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.. பாகிஸ்தானில் தலைவிரித்து ஆடும் மின் பற்றாக்குறை! என்னாச்சு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு பெரும் சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்துக் கடந்த 2019இல் ஆட்சிக்கு வந்த இம்ரான் கானால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.
இதன் காரணமாகப் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே வந்தது. இதனால் இம்ரான் கான் அரசு மீதான அழுத்தம் அதிகரித்தது.

இம்ரான் கான்
இந்தச் சூழலில் கடந்த மாதம் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் முன்மொழிந்தன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளும் அவருக்கு இம்ரான் கான் அரசுக்கு எதிராகத் திரும்பியதால், அவர் பதவி இழந்தார். இதையடுத்து அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். இருந்த போதிலும், இன்னும் கூட அங்கு அரசியல் அழுத்தம் குறைந்ததாகத் தெரியவில்லை.

மின்சார பாதிப்பு
அதேபோல பொருளாதார ரீதியாகவும் அந்நாடு மோசமான நிலைமையிலேயே உள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசால் நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயுவை வெளிநாடுகளில் இருந்து வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. உக்ரைன் போர் காரணமாகக் கடந்த மாதம் முதல் சர்வதேச சந்தையில் எரிபொருள் பற்றாக்குறை அதிகமாகி உள்ளது.

உயரும் மின் செலவுகள்
மின்சாரம் தயாரிக்கத் தேவையான பொருட்களின் விலையும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அரசால் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத டூளஸ் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் எரிசக்திக்கான செலவுகள் கடந்த பிப்ரவரி மாதம் $15 பில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது. கடந்த 9 மாதங்களில் பாகிஸ்தானின் மின்சார செலவு இரட்டிப்பாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐந்தில் ஒரு பங்கு
மின்சாரம் தயாரிக்கத் தேவையான பொருட்கள் இல்லாததால் கடந்த ஏப்ரல் 13இல் சுமார் 3,500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 7,000 மெகாவாட்களுக்கும் அதிகமான மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இது நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறனில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு ஆகும்.

மின் தடை
இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், இதுவரை பாகிஸ்தான் நாட்டிற்கு எரிசக்தி அமைச்சராக யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் அங்கு ஏற்பட்டுள்ள எரிசக்தி பற்றாக்குறையைச் சமாளிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஒப்பீட்டளவில் ஏழ்மையான நாடான பாகிஸ்தானில் எரிபொருள் செலவுகள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் துன்பத்தை எதிர்கொண்டுள்ளனர். பல பகுதிகளில் நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பாகிஸ்தானின் நீண்ட கால எல்என்ஜி சப்ளையர்கள் கடந்த சில மாதங்களில் டெலிவரி செய்யத் திட்டமிட்ட பல இறக்குமதிகளை ரத்து செய்திருந்தது.












Click it and Unblock the Notifications