போர் வெடித்தால் 4 நாள் மட்டுமே சமாளிக்க முடியும்.. ஆயுதம் இல்லாமல் பீதியில் கிடக்கும் பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தில் பீரங்கி வெடிமருந்துகளுக்கு உட்பட முக்கிய வெடி பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போர் வெடித்தால் பாகிஸ்தானால் வெறும் 4 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

4 நாள் தான் சமாளிக்க முடியும்
இதற்கிடையே போர் வெடித்தால் பாகிஸ்தானால் வெறும் 4 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகப் பீரங்கி வெடிகுண்டுகள் பாகிஸ்தானிடம் மிகக் குறைவாகவே இருக்கிறதாம். இதனால் பாகிஸ்தான் ராணுவமே பதற்றத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா இடையே மோதல் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். அதேபோல இஸ்ரேலும் ஹமாஸ், ஹவுதியுடன் போரை நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளும் (உக்ரைன், இஸ்ரேல்) தேவையான வெடிமருந்துகளை வாங்க பாகிஸ்தானுடன் ஆயுத ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டன. இதனால் அந்த இரு நாடுகளுக்கும் பாகிஸ்தான் வெடிமருந்துகளை அதிகம் அனுப்பிவிட்டன. இதனால் பாகிஸ்தான் வசம் இருக்கும் ஆயுதங்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டன.
தள்ளாடும் பாகிஸ்தான்
இதனால் பாகிஸ்தான் ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை ரெடி செய்து தர முடியாமல் பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலைகள் என்ற நிறுவனம் தள்ளாடி வருகிறது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தங்கள் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கும் என்று பல பாகிஸ்தான் தலைவர்கள் கூறியுள்ளனர். இந்தியா தாக்குதல் நடத்தினால் அதற்குச் சரியான பதிலடியை பாகிஸ்தான் கொடுக்கும் என்றும் அவர்கள் கூறி வந்தனர்..
96 மணி நேரம் தான்
ஆனால், இந்தியா தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானால் சில நாட்கள் மட்டுமே சமாளிக்க முடியும். சரியாகச் சொல்லப்போனால் மோதல் உச்சமடையும்போது வெறும் 96 மணி நேரம் மட்டுமே சமாளிக்கக்கூடிய வெடி மருந்துகளை பாகிஸ்தான் ராணுவம் தனது கைவசம் வைத்திருக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் எந்தளவுக்குப் பலவீனமாக இருக்கிறது என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
பொதுவாக இந்தியா தாக்குதல் நடத்தினால் அதற்கு உடனடியாகப் பதிலடி கொடுக்க வேண்டும் என அதற்கேற்பத் தயாராக இருக்க வேண்டும் என்பேத பாகிஸ்தானின் ராணுவக் கோட்பாடாகும். ஆனால், இந்த முறை போதிய வெடிமருந்துகள் இல்லாமல் பாகிஸ்தான் திண்டாடி வருகிறது. குறிப்பாக M109 ஹோவிட்சர்களுக்கு போதுமான 155 மிமீ குண்டுகளும் இல்லை. BM-21 அமைப்புகளுக்குத் தேவையான 122 மிமீ ராக்கெட்டுகளும் போதுமான அளவுக்கு இல்லையாம்.
ஆயுதங்களே இல்லை
கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் வசம் இருந்த 155 மிமீ பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதுவே இப்போது ஆயுதப் பற்றாக்குறை ஏற்படக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. இப்படி முக்கிய வெடிமருந்துகள் இல்லாததால் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை பதற்றத்திலும் பீதியிலும் உள்ளதாம். அங்குக் கடந்த மே 2ம் தேதி நடந்த சிறப்புப் படைத் தளபதிகள் மாநாட்டில் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டது.
அதேநேரம் பாகிஸ்தான் ராணுவம் போதிய வெடி மருந்துகள் இல்லாமல் திணறுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா இருந்த போது இந்தப் பிரச்சினையை அவர் எழுப்பியிருந்தார். அதாவது இந்தியாவுடன் நீண்ட காலப் போர் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க பாகிஸ்தானிடம் வெடிமருந்துகளும் பொருளாதார வலிமையும் இல்லை என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications